சீர்காழியில் பரபரப்பு: வீதிக்கு வர அஞ்சும் மக்கள் - ஓட ஓட விரட்டி 4 பேரை கடித்து குதறிய வெறிநாய்!
சீர்காழியில் வெறிநாய் ஒன்று ஒரே நேரத்தில் 4 பேரை கடித்ததில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அடுத்தடுத்து நான்கு பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வங்கி பணியாளருக்கு நேர்ந்த விபரீதம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி மற்றும் புதிய பேருந்து நிலையப் பகுதிகள் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பரபரப்பான மண்டலங்களாக திகழ்பவை. இந்நிலையில், இன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று திடீரென பொதுமக்களை நோக்கி பாய்ந்து கடிக்கத் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (35) என்பவர் சீர்காழியில் உள்ள வங்கி ஒன்றில் எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வருகிறார். அவர் தனது பணி நிமித்தமாக தென்பாதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த வெறிநாய் எதிர்பாராத விதமாக அவரைப் பாய்ந்து கடித்தது. இதனால் நிலைகுலைந்த அவர் அலறித் துடித்தார்.
அடுத்தடுத்து பாய்ந்த வெறிநாய்
சங்கரை கடித்த கையோடு ஆத்திரத்துடன் நகர்ந்த அந்த வெறிநாய், அடுத்து புதிய பேருந்து நிலையப் பகுதியை நோக்கி ஓடியது. அங்கு இருசக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் நவநீதன் (53) என்பவரை கடித்தது. மேலும் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஜக்ரியா (73) என்பவரையும், பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வரும் மாணவரான ஸ்ரீராம் என்பவரையும் அடுத்தடுத்து கடித்துக் குதறியது. ஒரே நேரத்தில் நான்கு பேரை அந்த நாய் கடித்ததைக் கண்ட பேருந்து நிலையப் பயணிகள் மற்றும் சாலையில் சென்ற பொதுமக்கள் கடும் அச்சமடைந்து நாலாப்புறமும் சிதறி ஓடினர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
நாய்க்கடியால் படுகாயமடைந்து துடித்த சங்கர், நவநீதன், ஜக்ரியா மற்றும் மாணவர் ஸ்ரீராம் ஆகிய நான்கு பேரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, சீர்காழி அரசு பெரிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு, மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை வழங்கி, வெறிநாய் கடிக்கு எதிரான தடுப்பூசிகளைச் செலுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நால்வரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொதுமக்கள் வீதிக்கு வர அச்சம்
சீர்காழி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பேருந்து நிலையம், சந்தை பகுதிகள், தென்பாதி போன்ற முக்கிய இடங்களில் கூட்டமாகச் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகளும், நடைபாதைவாசிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது ஒரே நாளில், ஒரே நேரத்தில் நகரின் மையப்பகுதியில் வைத்து வெறிநாய் நான்கு பேரைக்கடித்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் பீதியை கிளப்பியுள்ளது. சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தனியாக வீதியை விட்டு வெளியே வர அஞ்சும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தெருநாய்களை பிடிக்க கோரிக்கை
நகரில் வெறிநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். நகரின் அனைத்து வார்டுகளிலும், குறிப்பாக பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் சுற்றித்திரியும் ஆபத்தான தெருநாய்களை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.
மேலும், தெருநாய்களுக்கு முறையாக வெறிநாய் தடுப்பூசி போடுவதற்கும், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு திட்டத்தைச் சீராகச் செயல்படுத்துவதற்கும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















