விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க! 100% மானியத்தில் பாசன வசதி பெற தேவையான 8 முக்கிய ஆவணங்கள் இதுதான்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் 100% அரசு மானியம் பெற்று பயனடைய தோட்டக்கலைத் துறை அழைப்பி விடுத்துள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், பாசன நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தவும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான பிரதம மந்திரி - தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் "துளி நீரில் அதிக பயிர்" என்ற பிரிவின் கீழ், 80 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவ அரசு மானியம் வழங்கப்படவுள்ளது. விவசாயப் பெருமக்கள் குறைந்தளவு நீரைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற இத்திட்டம் பெரும் வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரிய பாசன முறையும் நுண்ணீர் பாசனத்தின் அவசியமும்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தென்னை, மா, முந்திரி, வாழை மற்றும் பல்வேறு காய்கறிப் பயிர்கள் உட்பட சுமார் 4000 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் தீவிரமாக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை பெரும்பான்மையான விவசாயிகள் பழமையான திறந்தவெளி வாய்க்கால் பாசன முறையையே பயன்படுத்தி வருகின்றனர். இம்முறையில் அதிகளவு நீர் வீணாவதுடன், சாகுபடி செலவும் அதிகரிக்கிறது. வறட்சி காலங்களில் பயிர்களைக் காப்பாற்றவும், நிலத்தடி நீர்மட்டத்தைச் சீராகப் பராமரிக்கவும் நுண்ணீர் பாசன முறையே மிகச் சிறந்த மாற்று தீர்வாக வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
தெளிப்புநீர் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் அறிவியல் நன்மைகள்
நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் தெளிப்புநீர் பாசனம் மற்றும் சொட்டுநீர் பாசனம் என இருவகை நுட்பங்கள் விவசாயிகளுக்குக் கிடைக்கின்றன. இதில் தெளிப்புநீர் பாசன முறையானது கீரை மற்றும் கொத்தமல்லி போன்ற பரவலாக வளரும் தோட்டக்கலை பயிர்களுக்கு மிகவும் ஏற்றதாகும். சொட்டுநீர் பாசன அமைப்பில், பிரத்யேகக் குழாய்கள் மூலம் பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகச் சொட்டு சொட்டாகத் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால் மிகக் குறைந்த தண்ணீரைக் கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்ய முடிகிறது. மேலும், நீரில் கரையும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை இக்குழாய்கள் மூலமே நேரடியாக வேர்ப்பகுதிக்கு அளிக்க முடிவதால், ஆட்களுக்கான கூலிச் செலவு கணிசமாகக் குறைகிறது.
அறிவியல் பூர்வமாகக் கணக்கிடப்பட்டு தேவையான அளவு மட்டுமே நீர் வழங்கப்படுவதால் பாசன நீர் சேமிக்கப்படுவதோடு, வேரைச் சுற்றி மட்டும் நீர் பாய்வதால் களைச்செடிகளின் வளர்ச்சியும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
மானிய விவரங்கள் மற்றும் பயன்பெறும் கால அளவு
ஒவ்வொரு துளி நீரையும் திறம்படப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியைப் பெருக்குவதையே இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத முழு அரசு மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத அரசு மானியத்திலும் பாசன அமைப்புகள் அமைத்துத் தரப்படுகின்றன. ஒருமுறை மானியம் பெற்று சொட்டுநீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள், 7 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் அதே நிலத்திற்கு மானியத்தில் புதிய பாசன அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.
அதேபோல், ஏற்கனவே தெளிப்புநீர் பாசனம் அமைத்த விவசாயிகள் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, பெற்ற மானியத்தைக் கழித்துக் கொண்டு சொட்டுநீர் பாசன வசதிக்கு மாறிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நடப்பு 2026-2027 நிதியாண்டிற்கு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 80 ஹெக்டேர் பரப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள் மற்றும் தொடர்பு எண்கள்
இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்புவோர் தங்களது குடும்ப அட்டை நகல், புகைப்பட அடையாள ஆவணம், விவசாயியின் புகைப்படம், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், நில வரைபடம் மற்றும் சிறு/குறு விவசாயி சான்று ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டார விவசாயிகள், மயிலாடுதுறை தோட்டக்கலை அலுவலரை 9698502526 என்ற எண்ணிலும், குத்தாலம் அலுவலரை 9843405617 என்ற எண்ணிலும், தோட்டக்கலை உதவி இயக்குநரை 9095854787 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். செம்பனார்கோவில், சீர்காழி மற்றும் கொள்ளிடம் வட்டார விவசாயிகள், செம்பனார்கோவில் அலுவலரை 9940247961, சீர்காழி அலுவலரை 8072439304, கொள்ளிடம் அலுவலரை 8220887022 ஆகிய எண்களிலும், தோட்டக்கலை உதவி இயக்குநரை 9159627783 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தங்களது பெயர்களைப் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















