"தமிழகத்திற்கு ஓரவஞ்சனை... விவசாயிகளுக்கு துரோகம்!" - மத்திய அரசை கடுமையாக சாடிய எம்பி சுதா!
தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா கடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: "மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி ஆதாரங்களை முழுமையாக வழங்காமல் தொடர்ந்து ஓரவஞ்சனை செய்வதோடு, விளைபொருள் கொள்முதல் இலக்கைக் குறைத்து விவசாயிகளையும் வஞ்சித்து வருகிறது" என்று மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (டிஷா - DISHA) கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், முன்னிலை வகித்தார். மேலும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் முன்னிலை வகித்தனர்.
மத்திய அரசு நிதி சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு
இக்கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்து கண்காணிப்புக் குழுவின் தலைவரான எம்பி ஆர்.சுதா விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக, பின்வரும் முக்கியத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து துறை வாரியாக விவாதிக்கப்பட்டது;
* வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாடு: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்), தீனதயாள் அந்தோதயா யோஜனா, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்.
* குடிநீர் மற்றும் சுகாதாரம்: தேசிய ஊரக குடிநீர் வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (சுவச் பாரத்).
* வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு: பிரதம மந்திரி அவாஸ் யோஜனா (வீட்டுவசதித் திட்டம்), அழகிய நகரமயமாக்கல் பணி, தொலைத்தொடர்பு, அஞ்சல்துறை, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு பணிகள்.
* சமூக நலம் மற்றும் கல்வி: தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம், சுகம்யா பாரத் அபியான், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ICDS), சத்துணவுத் திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல திட்டங்கள்.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, நகராட்சி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், மின்சார வாரியம், பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அதிகாரிகள் தங்களது துறை சார்ந்த திட்ட இலக்குகள் மற்றும் அடைவுகள் குறித்த அறிக்கையை இக்கூட்டத்தில் சமர்ப்பித்தனர். ஒவ்வொரு திட்டத்தின் இலக்கீடும் தணிக்கை செய்யப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.சுதா கூறியதாவது;
"மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசாங்கங்களின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்கள் எந்த அளவிற்கு தரைமட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கண்காணிக்கும் விதமாக இந்த ஆய்வுக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்தின் கீழும் இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, மாவட்டத்தின் கடைக்கோடி மக்கள் வரை எவ்வளவு பேர் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர், ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி இலக்கீடு எவ்வளவு, அதில் தற்போதுவரை எட்டப்பட்டுள்ள இலக்கு எவ்வளவு என்பது குறித்து மிகத் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது."
விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு: பச்சை பயிறு கொள்முதல் சர்ச்சை
தொடர்ந்து மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த எம்பி ஆர்.சுதா, விவசாயப் பிரச்சினையை மையப்படுத்திப் பேசினார்,
"மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் போக்கையே கையாண்டு வருகிறது. மாநிலத்திற்கு வர வேண்டிய நிதிப் பகிர்வை முழுமையாகத் தராமல் ஓரவஞ்சனை செய்கிறது. குறிப்பாக, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், இந்த ஆண்டிற்கான பச்சை பயிறு கொள்முதல் இலக்கை கடந்த ஆண்டைவிட மிகக் குறைவாக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மத்திய அரசுக்கு உரிய அழுத்தமும் பரிந்துரையும் செய்து, விவசாயிகளிடமிருந்து பச்சை பயிறை முழுமையாகக் கொள்முதல் செய்யத் தேவையான அனைத்து துரித நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்."
ரயில்வே மேம்பாட்டு பணிகள் மற்றும் எக்ஸ்லேட்டர் வசதி
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
"மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன மேம்பாட்டுப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகுதான், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரிதும் உதவக்கூடிய எக்ஸ்லேட்டர் (நகரும் படிக்கட்டு) மற்றும் லிப்ட் சேவைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக வரும்" என்று அவர் விளக்கமளித்தார்.
அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி உத்தரவு
இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது தொகுதிகளில் விடுபட்டுள்ள திட்டங்கள், நிலுவையில் உள்ள உள்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் மனுக்களாக அளித்தனர்.
மக்கள் பிரதிநிதிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உத்தரவிட்டார். மேலும், "அரசுத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். பணிகளைத் தொய்வின்றி விரைந்து முடித்து, காலத்தே மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்" என்று கூட்டத்தில் கறாராக அறிவுறுத்தப்பட்டது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















