அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு!
"தண்ணீர் தராமலேயே தந்துவிட்டோம் என அதிகாரிகள் அளித்த பொய் அறிக்கையால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், காளி ஊராட்சிக்கு உட்பட்ட கிடாய்த்தலைமேடு கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். தங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் போலி அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
6 மாத கால அவதி: 2 கி.மீ நடக்கும் அவலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, காளி ஊராட்சியில் அமைந்துள்ள கிடாய்த்தலைமேடு கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் (Overhead Tanks) கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தன.
இதில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள 70 குடும்பத்தினர் தடையின்றி குடிநீர் பெற்று வருகின்றனர். ஆனால், மற்றொரு பகுதியில் உள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கும் இரண்டாவது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென குழாய் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பு சரிசெய்யப்படாததால், அந்தப் பகுதி முழுமையாக குடிநீர் விநியோகத்தை இழந்தது. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் முதியவர்கள் குடிநீருக்காக தினமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அருகில் உள்ள விவசாய வயல்களுக்கு நீர் பாய்ச்சும் ஆழ்துளை கிணறுகளில் (போர்வெல்) இருந்து ஆபத்தான முறையில் தண்ணீரை குடங்களில் பிடித்து வந்து, அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் சூழலில், தண்ணீருக்காக கிலோமீட்டர் கணக்கில் அலைய வேண்டியிருப்பது தங்களை பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியமும், போலி பதில் மனுவும்
இப்பிரச்சனை குறித்து கிராம மக்கள் தரப்பில் காளி ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பலமுறை நேரில் சென்று முறையிட்டும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமிற்கு ( grievances day) மூன்று முறை நேரில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் விரிவான புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
ஆனால், இந்த மனுக்கள் மீது மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகம் எந்தவொரு தரைமட்ட நடவடிக்கையும் (Ground-level action) எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அதிர்ச்சியூட்டும் விதமாக, ஏற்கனவே அளிக்கப்பட்ட மனுக்களுக்கு அதிகாரிகள் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் கடிதத்தில், "கிடாய்த்தலைமேடு கிராமத்தில் குடிநீர் குழாய் அடைப்புகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது" என போலியான அறிக்கையை சமர்ப்பித்து வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் இந்த போலி பதில் மனுவைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், "தங்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராத நிலையில், அதிகாரிகள் தங்களை ஏமாற்றும் நோக்கில் இவ்வாறு பொய் அறிக்கை அளித்துள்ளனர்" என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கண்ணீர் மல்க முறையிட்டனர்.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த தையல்நாயகி கூறுகையில்; "நாங்க மனு குடுத்து குடுத்து சோர்ந்து போயிட்டோம். ஆறு மாசமா எங்க ஊர்ல தண்ணி இல்லை. காலையில எந்திரிச்ச உடனே வீட்டு வேலையை பார்க்க முடியாம, ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற வயல் காட்டுக்கு ஓட வேண்டியிருக்கு. அங்க இருக்குற மோட்டார்ல இருந்துதான் தண்ணி புடிச்சுட்டு வரோம். வயசான காலத்துல குடத்தை தூக்கிகிட்டு வெயில்ல நடக்கிறது எவ்வளவு கஷ்டம்னு எங்களுக்குத்தான் தெரியும்.
கலெக்டர் ஆபீஸ்ல மூணு தடவை மனு குடுத்தோம். ஆனா, அதிகாரிங்க நாங்க தண்ணி குடுத்துட்டோம்னு பொய் கணக்கு எழுதி வச்சிருக்காங்க. புதுசா பொறுப்பேத்து இருக்குற இந்த அரசு, எங்களோட கஷ்டத்தை புரிஞ்சுகிட்டு ஒரு வாரத்துக்குள்ள இந்த அடைப்பை சரி பண்ணி, தடையோடாம தண்ணி வர வைக்கணும். இல்லைன்னா நாங்க அடுத்த கட்டமா பெரிய போராட்டத்துல இறங்குவோம்." என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் ராஜேந்திரன் என்பவர் கூறுகையில்; "எங்க கிராமத்துல குடிநீர் பிரச்சனை ஒரு பக்கம்னா, போக்குவரத்து பிரச்சனை இன்னொரு பக்கம் எங்களை வாட்டி வதைக்குது. எங்க பகுதிக்கு காலையில ஒன்னு, சாயங்காலம் ஒன்னுன்னு ரெண்டே ரெண்டு பஸ் மட்டும்தான் வருது. இதனால பள்ளி, கல்லூரிக்கு போற மாணவ-மாணவிகளும், வேலைக்கு போற பொதுமக்களும் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவசரத்துக்கு கூட எங்களால வெளியூர் போக முடியல. குடிநீர் தடையை உடனே சரி செய்றதோடு மட்டுமில்லாம, எங்க கிடாய்த்தலைமேடு கிராமத்துக்கு கூடுதல் பேருந்து சேவைகளையும் மாவட்ட நிர்வாகம் உடனே ஏற்படுத்தி தரணும். மக்கள் அடிப்படை வசதிக்கே இவ்வளவு கஷ்டப்பட்டா நாங்க யார்கிட்ட போய் முறையிடுறது? என வேதனை தெரிவித்தார்.
கோரிக்கை மனு மற்றும் கிராமவாசிகளின் எச்சரிக்கை
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம், தங்களின் நியாயமான கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் தங்களின் ஆதங்கத்தை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று நேரில் அளித்தனர்.
அதில், "ஒரு வார காலத்திற்குள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடைப்பை நீக்கி, தடையற்ற குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், கிராம மக்களைத் திரட்டி காலிக்குடங்களுடன் மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















