குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கையுடன்தான் மது விற்பனை செய்யப்படுகிறது - ஏ.டி.எஸ்.பி சிவசங்கர் பேச்சு...!
மயிலாடுதுறையில் ‘வெற்றிக்கொடி கட்டு’ விருது நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி சிவசங்கர் போதையால் பாதை மாறும் இளைஞர்களைச் சரி செய்வது எப்படி?" என்ற தலைப்பில் இளைஞர்களைச் சிந்திக்கும் வகையில் உரையாற்றினார்.

மயிலாடுதுறை: நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல்துறை ஆகியவை இணைந்து மிகச்சிறப்பான விழிப்புணர்வு மற்றும் பாராட்டு விழாவினை நடத்தின. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு ‘வெற்றிக்கொடி கட்டு’ விருதுகளும், தூய்மைப் பணியாளர்களுக்கு ‘தங்கமகள்’ விருதுகளும் வழங்கப்பட்டன.
அரசாங்கத்தை வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள்: தாசில்தார் அறிவுரை
இவ்விழாவின் ஒரு பகுதியாக ‘இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சமூக நல்லிணக்கம், தமிழ் மொழிப்பற்று மற்றும் நாட்டுப்பற்று’ குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், "இன்றைய மாணவர்கள் அரசாங்கத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவது?" என்ற தலைப்பில் மாவட்ட தேர்தல் சிறப்பு தாசில்தார் விஜயராகவன் தலைமை உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "அரசாங்கம் மாணவர்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களையும், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறது. வெறும் வேலை தேடுபவர்களாக இருக்காமல், அரசு வழங்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றியாளர்களாகவும், சமூகத்திற்குப் பங்களிப்பவர்களாகவும் மாணவர்கள் மாற வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
"தன்னைத்தானே திருத்திக்கொள்வதே சிறந்த மருந்து"
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட நாகை கடலோர காவல் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) சிவசங்கர், "போதையால் பாதை மாறும் இளைஞர்களைச் சரி செய்வது எப்படி?" என்ற தலைப்பில் இளைஞர்களைச் சிந்திக்கும் வகையில் உரையாற்றினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள்;
*வெற்றிக்கான மூன்று மந்திரங்கள்: "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இந்த மூன்றையும் வாழ்வின் அடிப்படையாகக் கொண்டால் எந்த ஒரு இளைஞனும் வீழ்ந்து போவதில்லை. இந்த உணர்வுகள் மனதில் இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்."
* மது ஒழிப்பும் சுயக்கட்டுப்பாடும்: "டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்துக்கொண்டு குடிக்க வேண்டாம் எனச் சொல்வதாகச் சிலர் விமர்சிக்கலாம். ஆனால், குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும் என்ற எச்சரிக்கையுடன்தான் மது விற்பனை செய்யப்படுகிறது. கடைகள் இல்லாவிட்டால் குடிப்பதை நிறுத்திவிடுவார்களா என்பது பட்டிமன்றத்திற்குரிய விவாதம். குடிப்பவர்களுக்கு மது எங்கு கிடைக்கும் என்பது காடாக இருந்தாலும் தெரியும். எனவே, சட்டங்களால் மதுவை ஒழிப்பதை விட, குடிப்பழக்கம் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்வதே நிரந்தரத் தீர்வாகும்."
* எம்.ஜி.ஆர் - இளைஞர்களின் முன்னோடி: "திரைப்படப் பாடல்கள் மூலம் சமுதாயத்தில் பல தீய கருத்துகள் திணிக்கப்பட்ட காலமுண்டு. ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மது அருந்தும் காட்சிகளில் நடித்ததாகவோ, நிஜ வாழ்வில் பருகியதாகவோ சான்றுகள் இல்லை. அவர் தனது பாடல்கள் மூலம் இளைஞர்களுக்கு நற்கருத்துகளைத் தந்தார். அவருடைய பாடல்கள்தான் என்னையும் வளர்த்தன. இன்றைய குழந்தைகளும் அத்தகைய அர்த்தமுள்ள பாடல்களைக் கேட்க வேண்டும்."
மொழிப்பற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டலும்
தொடர்ந்து பேசிய தமிழ் பேராசிரியர் தமிழ்வேல், இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களுக்குத் தாய்மொழிப் பற்று மற்றும் நாட்டுப்பற்று ஏன் அவசியம் என்பது குறித்து உருக்கமாகப் பேசினார். மொழிப்பற்று என்பது ஒரு மனிதனின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவனைச் சமூகப் பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் என்றார்.
ட்ரீம்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் நிறுவனர் விஜயன், மாணவர்களுக்கான தற்போதைய வேலைவாய்ப்புச் சூழல் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவான கருத்துரைகளை வழங்கினார். தொழில்நுட்ப வளர்ச்சியில் இளைஞர்கள் தங்களை எவ்வாறு தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் விளக்கினார்.
விருதுகளும் கௌரவிப்பும்
விழாவின் நிறைவாக, கல்வி மற்றும் சமூகச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு ‘வெற்றிக்கொடி கட்டு’ சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன. அதேபோல், நகரைத் தூய்மையாகப் பராமரிப்பதில் அயராது உழைக்கும் தூய்மைப் பணியாளர்களைக் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு ‘தங்கமகள்’ விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.






















