பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்த நிலையில் மாநிலங்களவைக்கு இன்று வருகை தந்து பேசினார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார். எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்விகளுக்கு பயந்து மக்களவைக்கு பிரதமர் வரவில்லை என புகார் எழுந்த நிலையில் மாநிலங்களவைக்கு இன்று வருகை தந்து பேசினார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்; என்னை பேச அனுமதிக்க வேண்டும்” என எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்த நிலையில், ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதனைத்தொடர்ந்து, பிரதமர் பேசிய நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்காவிட்டால் பிரதமரை பேசவிடமாட்டோம் என முழக்கமிட்ட எதிர்க்கட்சிகள் பின்னர் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “வளர்ச்சி அடைந்த இந்தியாவில் அனைவருக்கும் வளர்ச்சியை உறுதி செய்து வருகிறோம். மல்லிகார்ஜுன கார்கே எழுந்து நின்று முழக்கம் எழுப்புவதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கான வளர்ச்சியை இந்த அரசாங்கம் கொடுத்திருக்கிறது. உலக பொருளாதாரத்தில் 2014இல் 11வது இடந்தில் இருந்த இந்தியா, தற்போது 3வது இடத்தில் இருக்கிறது. இந்தியா பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது” என்றார்.
இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இந்தியாவின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று தெரிவித்த பிரதமர், அரசியல், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருவதாகவும் உற்பத்திக்கான உகந்த சூழலை உருவாக்கி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் தொலைநோக்கு பார்வை இல்லை
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்களிடம் தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் அவர்களின் ஆட்சிக்காலத்தில் வங்கிகள் கடனில் மூழ்கி இருந்தது என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எப்போதும் பணியாற்றியது இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் ஓடி விட முடியாது
எதிர்க்கட்சியினர் ஓடி விட முடியாது; பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற பிரதமர் மோடி, கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவறுகளை தாங்கள் செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்துக்கான இலக்குகளோ அல்லது அதற்கான நோக்கங்களோ இருந்தது இல்லை என்று தெரிவித்த மோடி, வர்த்தக ஒப்பந்தம் இளைஞர்களுக்கு பயனளிக்கும்; இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை உலக நாடுகள் பாராட்டுவதாகவும் உலகின் 3ஆவது பெரிய பொருளாதரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணித்து வருவதாகவும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வர்த்தக ஒப்பந்தங்களில் புரட்சி செய்து வருவதாகவும் அரசின் முதிர்ச்சியான முடிவுகளால் சீர்திருத்தங்கள் சாத்தியமானதாகவும் பிரதமர் பேசினார்.
ஒப்பந்தங்களில் புரட்சி
பாஜக அரசு செய்துள்ள ஒப்பந்தத்தை போல யாராவது செய்துள்ளார்களா? எனக் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, உலக நாடுகளின் சந்தைகள் இந்தியாவுக்காக திறந்துள்ளதாகவும் இந்தியா 9 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மட்டுமின்றி மேலும் பல நாடுகளுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் திரிணாமூல் காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் ஊடுருவல்காரர்களை திரிணாமூல் காங்கிரஸ் பாதுகாப்பதாகவும் மேற்கு வங்கத்தில் மக்களின் எதிர்காலம் இருளில் உள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், அதிகாரத்துக்கு வந்ததும் எதிர்க்கட்சிகள் தங்களது பைகளை நிரப்புவதிலேயே குறியாக உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு பாதிப்பு
காங்கிரஸின் மோசமான ஆட்சியில் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களை நாட்டின் இளைஞர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் பிரதமர் பேசினார். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிக மோசமாக நடந்து கொள்வதாகவும் விவசாயிகளின் பிரச்னைகளை காங்கிரஸ் ஒருபோதும் உள்வாங்கியது இல்லை எனவும் எனது தலைமையிலான ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்துடன் இயங்கி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.























