உங்க வீட்டுக்கே வராங்க... ஆனா நீங்க ஆன்லைன்லயே முடிச்சிடலாம்! மயிலாடுதுறையில் டிஜிட்டல் கணக்கெடுப்பு!
மயிலாடுதுறை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் 100% ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேக மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பு கூறியதாவது:
முதற்கட்டப் பணிகள் மற்றும் சுய கணக்கெடுப்பு கால அட்டவணை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணியான, "வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு" (Houselisting and Housing Census) பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை மிக விரிவான முறையில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது விவரங்களைப் பதிவு செய்யும் "சுய கணக்கெடுப்பு" (Self-Enumeration) நடைமுறை வரும் 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெற உள்ளது.
முற்றிலும் டிஜிட்டல் முறை
இணையதள முகவரி வெளியீடு மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளானது முற்றிலும் டிஜிட்டல் முறையில், பிரத்யேக மொபைல் செயலி (Mobile App) வழியாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த சுய கணக்கெடுப்பு காலத்தில் (17.07.2026 முதல் 31.07.2026 வரை) தங்களது வீடுகளில் இருந்தபடியே, இணையதளம் வழியாக தங்களது குடும்ப விபரங்களை மிக எளிமையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
சுய கணக்கெடுப்பிற்கான அதிகாரப்பூர்வ இணையதள முகவரி: https://se.census.gov.in பொதுமக்கள் இந்த இணையதள முகவரிக்குச் சென்று, கேட்கப்பட்டுள்ள விபரங்களை துல்லியமாகப் பதிவேற்றம் செய்து, தங்களது கடமையை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாவட்ட அளவில் கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலகங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்புப் பணிகளை எவ்வித தொய்வுமின்றி, முறைப்படி கண்காணிப்பதற்காகப் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலகங்களாக (Census Charge Offices) வகைப்படுத்தப்பட்டுச் செயல்பட உள்ளன. அதன் விபரம் வருமாறு
* ஊரகப் பகுதிகள் (4 வட்டாரங்கள்): மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி.
* நகராட்சிகள் (2 நகராட்சிகள்): மயிலாடுதுறை மற்றும் சீர்காழி.
* பேரூராட்சிகள் (4 பேரூராட்சிகள்): மணல்மேடு, குத்தாலம், வைத்தீஸ்வரன்கோயில் மற்றும் தரங்கம்பாடி.
மேற்கண்ட அனைத்துப் பொறுப்பு அலுவலகங்களின் மூலமாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்குத் தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு, பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை
பொதுமக்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தோ அல்லது இணைய வழியில் சுய கணக்கெடுப்பு விபரங்களைப் பதிவு செய்யும்போதோ ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால், அதனை உடனடியாக நிவர்த்தி செய்யும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய "மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை" (Census Control Room) தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04364 - 299304 பொதுமக்கள் தங்களுக்கு எழும் வினாக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு உரிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
"நாட்டின் எதிர்காலத் திட்டமிடலுக்கும், மக்கள் நலத்திட்டங்களைச் சரியாகக் கொண்டு சேர்ப்பதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மிக அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும், வரும் 17.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெற உள்ள இணைய வழி சுய கணக்கெடுப்பில் பங்கேற்று 100 சதவீதம் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும். ஆகஸ்ட் 1 முதல் 30 வரை தங்களது குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாக வருகை தரும் அரசு அங்கீகாரம் பெற்ற கணக்கெடுப்பாளர்களிடம், பொதுமக்கள் தங்களது அடையாள அட்டைகளைக் காண்பித்து, உரிய விபரங்களை எவ்வித தயக்கமுமின்றி வழங்கி, இம்முறை முற்றிலும் டிஜிட்டல் வடிவில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியினை 100 விழுக்காடு வெற்றிகரமாக முடிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























