மாணவிகளுக்குக் அந்த விதிமுறை பொருந்தாது..! பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு விடுதிகளில் சேர யாருக்கு என்ன தகுதி தேவை?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு சமூக நீதி விடுதிகளில் இலவச மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 20 சமூக நீதி விடுதிகளில் (BC / MBC / DNC) 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த அரசு சலுகைகளைப் பெற்றுப் பயனடையலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 20 விடுதிகள்: முழு விவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் எவ்வித தடையுமின்றி தங்களது கல்வியைத் தொடரும் பொருட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 20 அரசு நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றின் விவரம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது;
* பள்ளி மாணவர் விடுதிகள்: 06
* பள்ளி மாணவியர் விடுதிகள்: 07
* கல்லூரி மாணவர் விடுதிகள்: 04
* கல்லூரி மாணவியர் விடுதிகள்: 03
கல்வித் தகுதிகள்
பள்ளி விடுதிகளில் சேர 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் சேர அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு (UG), பட்ட மேற்படிப்பு (PG), தொழில் பயிற்சிப் படிப்புகள் (ITI) மற்றும் பாலிடெக்னிக் (Polytechnic) படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களும் தகுதியுடையவர்கள் ஆவர்.
விடுதிகளில் வழங்கப்படும் கட்டணமில்லாச் சலுகைகள்
அரசு சமூக நீதி விடுதிகளில் சேரும் மாணவர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி, முற்றிலும் இலவசமாகப் பல்வேறு சலுகைகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
உணவு மற்றும் தங்குமிடம்: விடுதி மாணவ, மாணவியர் அனைவருக்கும் தங்குவதற்குப் பாதுகாப்பான இடவசதியும், மூன்று வேளையும் தரமான, சத்தான உணவும் இலவசமாக வழங்கப்படும்.
இலவச சீருடைகள்: 4ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அவர்களின் அளவுகளுக்கு ஏற்ப 4 இணை (4 Sets) சீருடைகள் தைத்து இலவசமாக வழங்கப்படும்.
கல்வித் திறன் மேம்பாட்டு உதவிகள்: 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் பொதுத்தேர்வு மற்றும் உயர்கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், 'நீட்' (NEET) மற்றும் 'ஜெ.இ.இ' (JEE) போன்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கான பிரத்யேக வினா வங்கி நூல்கள் (Question Banks) மற்றும் சிறப்பு வழிகாட்டிப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
சேர்க்கைக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
அரசு விடுதிகளில் சேர்ந்து பயில விரும்பும் மாணவ, மாணவியர்கள் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
1. ஆண்டு வருமானம்: மாணவ, மாணவியரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்)-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. தொலைவு விதிமுறை: மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து அவர்கள் பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு
மாணவிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இந்த 8 கி.மீ தொலைவு விதிமுறையானது மாணவியருக்குப் பொருந்தாது.
இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை
தமிழ்நாடு அரசின் உன்னத கொள்கைப் முடிவின்படி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளிலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் (5 Seats) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தகுதியான மாணவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
விண்ணப்ப விநியோகம் மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாட்கள்
இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் (Warden) / காப்பாளினிகளிடமிருந்தோ (Matron) அல்லது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள "மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில்" இருந்தோ முற்றிலும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு
பள்ளி விடுதிகள்: சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினி அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 18.06.2026 -ம் தேதிக்குள்
கல்லூரி விடுதிகள்: சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினி அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் 15.07.2026 -ம் தேதிக்குள்.
சான்றிதழ் சமர்ப்பித்தலில் எளிய வழிமுறை
மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது சாதிச் சான்றிதழ் (Community Certificate) மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானச் சான்றிதழ் (Income Certificate) ஆகியவற்றை உடனடியாக இணைக்கத் தேவையில்லை. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விடுதியில் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுச் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் கல்வி பயிலும் தகுதியுடைய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அரசின் இந்த அரிய சலுகைகளைப் பயன்படுத்தி, தங்கு தடையின்றி தங்களது கல்வியைத் தொடருமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், கேட்டுக் கொண்டுள்ளார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















