அழிந்து போன வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள்... தயவு தாட்சண்யம் இன்றி செயல்பட்ட போலீஸ்... கலங்கும் விவசாயிகள்
கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என கூறி தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என கூறி தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, குண்டு கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவடை துவங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் பச்சைபயிறு வகைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.
அமைச்சரின் சொந்த மாவட்டத்திற்கு முழுமையாக வெள்ள நிவாரணம்
இதற்கு மார்ச் மாதத்திற்குள் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிகவும் சொற்ப அளவிலான இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கு முழுமையாக வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் இன்று டெல்டா பாசனதாரர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட விவசாயிகள்
அப்போது மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர், மைக் மூலம் கண்டன கோஷங்கள் எழுப்பிய விவசாயிகளிடம் இருந்து அவர்களை பேச முடியாதவாறு முதலில் மைக்கை பிடுங்கினர். தொடர்ந்து விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ், டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாவட்ட தலைவர் இயற்கை விவசாயம் ராமலிங்கம் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களை கைது செய்தனர். கைது செய்வதற்கு விவசாயிகள் முன் வராத நிலையில் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினார்.
காவல்துறையினர் மீது விவசாயிகள்
அப்பொழுது நிதிக்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்மூடி தனமாக நடந்துகொண்டு தங்களை தாக்கியதாக விவசாயிகள் குற்றச்சாட்டை தெரிவித்தனர். மேலும் தங்கள் உடைகள் கிழிக்கப் பட்டதாகவும், கை,கால்களில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட விவசாயிகளை வெளியே கொண்டு செல்லாத படி காவல்துறையினரின் வாகனங்களை சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்டாவை சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர், காவல்துறையை ஏவி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது என்று விவசாயிகள் தங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

