மே 15 -க்குள் தமிழ் இருக்க வேண்டும் - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அதிரடி...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் வைக்கப்படும் பெயர் வணிக நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பெயர் பலகைகளும் மே 15 -க்குள் தமிழ் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடை, வணிக நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து பெயர் பலகைளைகளும் மே 15 -க்குள் தமிழ் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
அரசு விதிகள்
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948ல் விதி 15-ன்படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும்.
- இதேபோல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ல் விதி 42(பி)-ன் படியும் வைத்திருக்க வேண்டும்.
- தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-ன்படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும்.
- மேலும், இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளில் அமையலாம்.
மாவட்ட அளவிலான குழு அமைப்பு
தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு அனைத்து கடைகள் நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர் துறை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகர் சங்கங்கள், உணவு, நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளனர்.
அபராதம் விதிப்பு
இக்குழுவினர் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து, விழிப்புணர்வினை ஏற்படுத்தி 2025 மே 15-க்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபாரதம் விதிக்கப்படும்.
Summer Holidays: தொடங்கிய கோடை விடுமுறை; பள்ளி மாணவர்கள் எப்படி பயனுள்ளதாக கழிக்கலாம்? இதோ ஐடியா!
100 சதவீதம் தமிழ் பெயர் பலகை
எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

