'டித்வா' புயல் எச்சரிக்கை: மயிலாடுதுறையில் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை! - 24x7 தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்
டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையதினம் விடுமுறை அளித்ததுடன் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மயிலாடுதுறை: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டித்வா' புயலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து, மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கவிதா ராமு, தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்.
முன்னதாக, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் (18.08.2025, 29.09.2025, 16.10.2025) நடத்தப்பட்டு, அனைத்துத் துறை அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புயல் எச்சரிக்கை காரணமாக தயார்நிலையை மேலும் வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மீட்பு மற்றும் நிவாரணத்திற்கான விரிவான ஏற்பாடுகள்
கூட்டத்தில், டித்வா புயலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள விரிவான தயார்நிலைகள் குறித்த புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட்டன.
கட்டுப்பாட்டு அறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை 24x7 சுழற்சி முறையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் செயல்பட்டு வருகிறது.
*வானிலை கண்காணிப்பு: மாவட்டத்தில் 13 தானியங்கி மழைமானி மையங்கள், 3 தானியங்கி வானிலை மையங்கள் மற்றும் 6 வழக்கமான மழைமானிகள் செயல்படுகின்றன. தகவல் தொடர்புக்கு 19 VHF (வயர்டு-அலாரம்) கருவிகள், செயற்கைக்கோள் தொலைபேசி (Satellite Phone) உள்ளிட்டவை தயார்நிலையில் உள்ளன.
* பாதுகாப்பு மற்றும் தங்குமிடங்கள்:
4 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 10 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 362 பள்ளிகள்/கல்லூரிகள், 146 திருமண மண்டபங்கள், 68 சமுதாயக் கூடங்கள் என மொத்தம் 576 தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
* பாதிப்புப் பகுதிகள்: மாவட்டத்தில் 201 பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 12 இடங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவை, 33 இடங்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை.
* முதன்மைப் பொறுப்பாளர்கள்: 4500-க்கும் அதிகமான முதல்நிலை பொறுப்பாளர்கள் அனைத்து வட்டங்களிலும் பயிற்சியளிக்கப்பட்டு மீட்புப் பணிகளுக்குத் தயார்நிலையில் உள்ளனர்.
மீட்புப் பணிகளுக்கான உபகரணங்கள் இருப்பு
புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக அகற்றி இயல்பு நிலைக்குக் கொண்டுவர, அனைத்துத் துறைகளிலும் போதுமான உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயந்திரங்கள்: 133 JCB இயந்திரங்கள், 164 ஜெனரேட்டர்கள், 57 பவர் சா, 31 ஹித்தாச்சி வாகனங்கள், 22 ஆயில் என்ஜின்கள்.
பொருட்கள்: 40,351 மணல் மூட்டைகள், 84 மரம் அறுக்கும் கருவிகள், 34,110 சவுக்குக் கம்பங்கள் மற்றும் 5,870 கிலோ பிளீச்சிங் பவுடர்.
மேலும், வட்ட அளவில் முன்னெச்சரிக்கை மற்றும் இடப்பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக் குழு என ஒவ்வொரு வட்டத்திற்கும் தலா 10 அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 வட்டங்களிலும் துணை ஆட்சியர்கள் தலைமையில் ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித்தனி குழுக்கள் செயல்படுகின்றன.
கடலோரப் பாதுகாப்பு மற்றும் மருத்துவம்
* மீனவர் எச்சரிக்கை: 25 கடற்கரை கிராமங்களில் எச்சரிக்கை கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. 28 கடலோர மீனவ கிராம பஞ்சாயத்துத் தலைவர்களை உள்ளடக்கிய பிரத்யேக 'WhatsApp குழு' உருவாக்கப்பட்டுள்ளது. நீச்சல் தெரிந்த 80 தன்னார்வலர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
மின் விநியோகம்: பருவ கால ஆய்வுகளின்படி, பழுதான 359 மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. மின் பாதைகளுக்கு இடையூறாக இருந்த 1915 மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. 10,795 மின்கம்பங்களும், 39 மின்மாற்றிகளும் அவசர காலத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
சுகாதாரம்: ஒவ்வொரு 5 வட்டாரத்திலும் சுகாதாரத் தேவைகளைக் கண்காணிக்க விரைவான பதிலளிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 நடமாடும் மருத்துவக் குழுக்களும், 108 ஆம்புலன்ஸ்களும் தயார்நிலையில் உள்ளன. வெள்ள பாதிப்பின்போது நாய் கடி மற்றும் பாம்பு கடி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் TD தடுப்பூசி, ரேபிஸ் தடுப்பு ஊசி (ARV) மற்றும் பாம்பு எதிர்ப்பு விஷ மருந்து (ASV) ஆகியவை போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
* உணவுப் பொருட்கள்: தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க 155 அங்காடிகள் கண்டறியப்பட்டு, 20% கூடுதல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மீட்புக் குழுக்கள் முகாமிட்டு தயார்நிலை
மாவட்ட அளவில் பேரிடரைச் சமாளிக்க, 31 வீரர்கள் அடங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சீர்காழியிலும், 31 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தரங்கம்பாடியிலும் முகாமிட்டுள்ளனர்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கவிதா ராமு அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களுக்கு அந்தந்த பகுதி அலுவலர்கள் உடனடியாகச் சென்று தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பொதுமக்களுக்கான அவசர எண்கள்
மழை மற்றும் சேதம் தொடர்பான புகார்களுக்கு, மயிலாடுதுறை மாவட்டக் கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 04364-222588 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இக்கூட்டத்தில், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விடுமுறை
டிட்வா புயல் மற்றும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளையதினம் நவம்பர் 29 -ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஶ்ரீகாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஶ்ரீகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார.






















