மயிலாடுதுறை: ‘யார்க்கர்’ நடராஜன் பந்துவீச்சில் கிளீன் போல்டான நடிகை தேவயானி!
டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, திருஇந்தளூர் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய செயற்கை புல்வெளி (Turf) விளையாட்டு மைதானம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் டி.நடராஜன் மற்றும் பிரபல நடிகை தேவயானி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நட்சத்திரங்கள் சங்கமித்த திறப்பு விழா
மயிலாடுதுறை திருஇந்தளூரில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் தனியார் செயற்கை புல்வெளி மைதானம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்குப் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய கிரிக்கெட் வீரர் டி. நடராஜன், பிரபல திரைப்பட நடிகை தேவயானி, புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரபல நகைச்சுவை நடிகர் மணி, ஜெயா டிவி செய்தி வாசிப்பாளர் சண்முகவேல் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மைதானத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மைதானத்தில் அரங்கேறிய சுவாரஸ்யம்: நடராஜன் Vs தேவயானி
மைதானம் திறக்கப்பட்ட கையோடு, விருந்தினர்கள் அனைவரும் களத்தில் இறங்கி கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் நடராஜன் பந்து வீச, அமைச்சர் லட்சுமி நாராயணன், நடிகர் மணி மற்றும் நடிகை தேவயானி ஆகியோர் பேட்டிங் செய்தனர்.
அப்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு அரங்கேறியது. நடிகை தேவயானி பேட்டிங் செய்யத் தயாராக நின்றபோது, நடராஜன் தனது துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நடராஜன் வீசிய அந்த ஒற்றைப் பந்தில், சற்றும் எதிர்பாராத விதமாக நடிகை தேவயானி 'கிளீன் போல்ட்' ஆனார். இதைக் கண்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவுட் ஆன போதிலும், புன்னகையோடு நடராஜனின் பந்துவீச்சை பாராட்டிய தேவயானி, விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைக் காணத் திரண்டிருந்த ரசிகர்கள், நடராஜன் மற்றும் தேவயானியுடன் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்துக்கொண்டனர். நட்சத்திரங்களும் முகம் சுளிக்காமல் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கி உற்சாகப்படுத்தினர்.
"இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்" - நடராஜன் நம்பிக்கை
நிகழ்ச்சியின் நிறைவாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கிரிக்கெட் வீரர் டி. நடராஜன், இந்திய அணியின் தற்போதைய நிலை குறித்து உற்சாகமாகப் பேசினார். அவர் கூறியதாவது: "தற்போது இந்திய கிரிக்கெட் அணி மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என மூன்று பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 260 ரன்கள் குவித்தது மிகப்பெரிய சாதனை. இது வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
தற்போது தொடங்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சரிசமமான பலத்துடன் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.
விளையாட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை போன்ற வளரும் நகரங்களில் இது போன்ற நவீன செயற்கை புல்வெளி மைதானங்கள் அமைக்கப்படுவது, கிராமப்புற இளைஞர்களுக்குப் பெரிய வாய்ப்பாக அமையும் எனப் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகை தேவயானி பேசுகையில், "இளைஞர்கள் செல்போன்களில் மூழ்கிவிடாமல், இது போன்ற மைதானங்களுக்கு வந்து உடற்பயிற்சியிலும் விளையாட்டிலும் ஈடுபட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
























