உணவுபாதுகாப்புத்துறை அனுமதிக்கு பின்னர் தான் புதிய வகை உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தர்பூசணி பரோட்டோவால் பரபரப்பு
கோயில் நகரமான மதுரை மாநகர் உணவுக்கும் பெயர் பெற்றது. பல ஊர்களில் சாப்பிட்ட உணவு விரும்பிகள் மதுரை சாப்பாடு போல வருமா என்று சொல்வது உண்டு. கறிதோசை, குடல் குழம்பு, நாட்டுக் கோழி குழம்பு என காரசார உணவுகளும். லேசான சைவ உணவுகளும். குளிர்ச்சியான ஜிகர்தண்டா, இளநீர் சர்பத் என ஏராளமான உணவுகள் இங்கு கிடைக்கிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று தண்ணீர் பழம் பரோட்ட என்ற உணவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே தர்பூசணி விவசாயிகள் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் சர்ச்சை வீடியோவால் விற்பனை குறைந்துள்ளதாக வேதனை தெரிவித்து வந்த சூழலில் ஹோட்டல் விளம்பரத்திற்காக இப்படி ஒரு செயலில் இறங்கியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கைலாச நாட்டில் உணவகம்
மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள் சிட்டி உணவகத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நித்தியானந்தா கைலாச நாடு என அறிவித்த நிலையில் கைலாச நாட்டில் தனது உணவகத்தை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி என கடிதம் எழுதி பரபரப்புக்குள்ளாக்கியவர் டெம்பிள் சிட்டி குமார். இந்நிலையில் அவ்வப்போது முக கவசம் போன்ற வடிவில் புரோட்டா உருவாக்குவது என நூதன முறையில் உணவகத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாக விளம்பரம் செய்து வரும் டெம்பிள் சிட்டி உணவாகமானது, தற்போது தமிழக முழுவதிலும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கக்கூடிய தர்பூசணி விவகாரத்தில் மேலும் ஒரு விவாதத்திற்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தர்பூசணி மேல் சமையல் எண்ணெய்
அதில் டெம்பிள் சிட்டி உணவகத்தின் சார்பில் வெயிலுக்கு அறிமுகம். அடிக்கிற வெயிலுக்கு ஆனந்தமாய் சுவைத்திட குளு குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்துடன் கூடிய விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த பதிவிற்கு கீழ் பலர் ஆஹா, ஓஹோ என்பது மூலம் சில சமூக வலைதள கணக்குகள் மூலம் ஆதவு தெரிவிப்பது போலவும் உள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் தர்பூசணி பழத்தின் மேல் எண்ணையை ஊற்றி புதிய விதமான தயாரிப்பு என கூறியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான வாடிக்கையாளர்கள் வரக்கூடிய இது போன்ற உணவகங்களில் வாடிக்கையாளர்களை சோதனை எலி போல மாற்றுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
உடல் உபாதை
மதுரையில் பிரபல உணவகமான டெம்பிள் சிட்டி உணவகத்தில் திடீரென தர்பூசணி புரோட்டா என அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வீடியோவில் தர்பூசணி பழத்தை புரோட்டா மாவின் மீது வைத்து அதன் மீது எண்ணெய் ஊற்றி அதனை பொறித்து பீட்சா போல கட் பண்ணி கொடுப்பது போன்ற வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இயற்கையாக உண்ணக்கூடிய உணவுகளை அடுப்பில் வேக வைத்து பரோட்டாவுடன் உண்பது உடலுக்கு உபாதை ஏதும் ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தோடு வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர். எனவே இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். எனவும் இது போன்ற வித்தியாசமான முயற்சிகள் என உணவகங்கள் செய்தாலும் கூட, அதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிய அனுமதி பெற்ற பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.