Jothimani | "என்னை வம்புக்கு இழுக்காதீங்க! ஸ்டாலினுக்காக அனுசரிச்சு போறோம்” கோ.தளபதிக்கு ஜோதிமணி பதிலடி
காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார், காங்கிரஸ் கட்சியை பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என கோ.தளபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜோதிமணி.
அதிகாரத்தில் பங்கு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மோதல் வலுத்துள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூருக்கும் ஜோதிமணிக்கும் சீட் கொடுக்க கூடாது என விமர்சித்தார்.
இதனால் கோபமான ஜோதிமணி, கோ.தளபதிக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார். அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம். கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக மாணிக்கம் தாகூரும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என தெரிவித்திருந்தார். கோ தளபதியின் பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.





















