புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள்... விருதுநகர் MSME-களுக்கு அரசு ஒப்பந்தம்!
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் தகுதித் தேவைகளுக்கு உட்பட்டு சோதனை கொள்முதல், விருப்பக் கடிதம், விற்பனையாளர் பதிவு மற்றும் தொடர் கொள்முதல் பெறுவதற்கான வாய்ப்பு.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்த பணிகளை பெற புதிய வணிக நிறுவனங்கள் பங்குபெறும் வகையில் விற்பனையாளர் மேம்பாட்டு கண்காட்சி நடைபெறவுள்ளது.
விருதுநகர் MSME-களுக்கு அரசு ஒப்பந்தம்: புதிய வணிக வாய்ப்புகள்!
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம், சென்னை சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களை அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளுடன் நேரடியாக இணைத்து, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் உருவாவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விற்பனையாளர் பதிவு மற்றும் தொடர் கொள்முதல் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம் மாவட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை நேரடியாக அறிமுகப்படுத்துவதுடன், நிறுவனங்களின் கொள்முதல் தேவைகளை அறிந்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும், விற்பனையாளர் பதிவு மற்றும் அரசு கொள்முதல் நடைமுறைகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில் உணவு பொருட்கள் பதப்படுத்துதல், அட்டைபெட்டி, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள், மருத்துவ கட்டுத்துணிகள், ரப்பர், பொறியியல் உதிரிபாகங்கள், மின்சாரம் மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித் நிறுவனங்களுடன் சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகளைத் தேர்வு செய்யலாம். மேற்கண்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் தகுதியான நிறுவனங்களுக்கு, சம்பந்தப்பட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் விதிமுறைகள் மற்றும் தகுதித் தேவைகளுக்கு உட்பட்டு சோதனை கொள்முதல், விருப்பக் கடிதம், விற்பனையாளர் பதிவு மற்றும் தொடர் கொள்முதல் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன
இந்நிகழ்வில் உருவாகும் தொழில் தொடர்புகள் இந்தநிகழ்ச்சியுடன் முடிவடையாமல், அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து நடைமுறை வணிக வாய்ப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய காரணிகளை உருவாக்குவதே இந்நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமாகும். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் மேம்பாட்டு அலுவலகம் - சென்னை, தமிழ்நாடு தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு, விருதுநகர் மாவட்ட தொழில் மையம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலகங்கள் இணைந்து இந்நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ளன. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தர, உற்பத்தி, சேவை, மற்றும் வர்த்தக நிறுவனங்களும் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் புதிய வணிகத் தொடர்புகளை உருவாக்கி அதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















