ஆடு, கோழி பண்ணை அமைக்க சூப்பர் திட்டம்.. திண்டுக்கல், திருப்பூர் மக்களே இது உங்களுக்குத்தான்
இத்திட்டத்தில் தனிநபர், சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்புச் சங்கங்கள் பிரிவு-8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப்பண்ணைகள் அமைத்திட மானியம் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், அரசு நிதியுதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாவட்டம் மற்றும் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

இத்திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப்பண்ணையுடன் குஞ்சு பொறிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10.00 லட்சம் முதல் ரூ.50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்புப் பண்ணை அமைக்க ரூ.15.00 லட்சம் முதல் ரூ.30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்ப்புல், மொத்த கலப்பு உணவு(TMR) மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தனிநபர், சுயஉதவிக் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்புச் சங்கங்கள் பிரிவு-8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களையும், விண்ணப்பிக்கத் தேவையான விரிவான திட்ட அறிக்கையினையும், விண்ணப்பதாரர்கள் http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகள் கால்நடைப் பண்ணை பெருக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றன. காரணம், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இறைச்சிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் மிகப்பெரிய டிமாண்ட் இருக்கிறது. இதன் சந்தை மதிப்பு பல்லாயிரம் கோடிகளாக இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டும் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை பால் சார்ந்த பொருட்களின் தேவை மற்றும் இறைச்சி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. அதனால் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




















