பென்னிகுவிக் பொங்கல் விழா... தேனி மக்கள் கோலாகல கொண்டாட்டம்..!
பென்னிகுவிக்கின் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றினால் தமிழக மக்களுக்கு முல்லைப்பெரியாறு அணையின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக இருப்பது முல்லைப்பெரியாறு அணை. இதனைக் கட்டியவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இவரை ஐந்து மாவட்ட மக்கள் கடவுளாகப் பாவித்து இன்று வரை வணங்கிவருகிறார்கள். தை 2ம் நாள் ஜனவரி 15ம் தேதி வரும் பொங்கலன்று வரும் இவரது பிறந்தநாளை, ’பென்னிகுவிக் பொங்கல்’ எனக் கொண்டாடி வருகின்றனர் தேனி மக்கள். கடந்த 2013-ம் ஆண்டு, 2,500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் வெங்கல உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அதனைத் திறந்துவைத்தார்.
இந்த மணிமண்டபத்தில், முல்லைப்பெரியாறு அணை கட்டப்படும்போது எடுக்கப்பட்ட அரிய பல புகைப்படங்கள் மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நேர்த்தியான சுற்றுலாத்தலமாக மாற்றப்படும்போது, முல்லைப்பெரியாறு அணையின் வரலாற்றையும், அதன் தேவையையும் சுற்றுலாப்பயணிகள் உணர்ந்துகொள்வார்கள். விரைவில் பென்னிகுவிக் மணிமண்டபத்தைச் தேனி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து அதனைச் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது, முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபம். இதனைச் சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என்பது தேனி மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது அம்மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் நீண்ட நாள் கனவாகவும் இருக்கிறது.
கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பாக ஏர்கனவே மாநில சுற்றுலா ஆணையரகம், மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் எழுதி அறிக்கை ஒன்றைக் கேட்டது. அதில், பென்னிகுவிக் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து, விரிவான அறிக்கையை அனுப்புமாறு தேனி மாவட்ட சுற்றுலா அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
இதுகுறித்து விவசாயச் சங்கத்தினர்களும் பொதுமக்களும் கூறுகையில், பென்னிகுவிக்கின் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றினால் தமிழக மக்களுக்கு முல்லைப்பெரியாறு அணையின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தினால், இந்தியா முழுவதிலுமிருந்து தேக்கடி, குமுளி செல்லும் சுற்றுலாப்பயணிகளை பென்னிகுவிக் மணிமண்டபத்துக்கு நம்மால் எளிதாக ஈர்க்க முடியும்.
இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு வருமானமும் கிடைக்கும். தேனிக்கு வரும் விவசாய சங்கங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பென்னிகுவிக் மணிமண்டபத்திற்குச் சென்று பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுச் செல்வது இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பென்னிகுவிக் மணிமண்டபத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுவதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்" என்கின்றனர். இன்று பென்னிகுவிக்கின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக லோயர்கேம்பில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர்களும், பொது மக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனால் பென்னிகுவிக் அவரது நினைவு மணி மண்டபத்தில் இன்று கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

