மேலும் அறிய
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது - உயர்நீதிமன்ற உத்தரவு !
தமிழக அரசு குறிப்பிட்டுள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை
Source : whatsapp
திடக்கழிவுகளால் ஏற்படும் சுகாதார பாதிப்பு அபாயம் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை - நீதிபதி.
திருவிழாவில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கோரிய வழக்கு - மதுரை அமர்வு
திருச்சி ராஜா கருப்பணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்..," திருச்சி பீமாநகரில் செடல் மாரியம்மன் கோயில் உள்ளது. வைகாசி தேர் திருவிழா நடத்த வலியுறுத்தி அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். திருவிழா நடத்த உத்தரவிட வேண்டும், என்றார். இவ்வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
கோயில் தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகரன் வாதிடுகையில்,
பக்தர்கள், மண்டகப்படிக்கு தகுதியுடையவர்கள் என உரிமை கோரும் நபர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஒவ்வொரு திருவிழாவின்போதும், இத்தகைய முரண்பட்ட உரிமை கோரிக்கைகள் எழுகின்றன. இதனால் திருவிழாவை நடத்த இயலாத நிலையில் செயல் அலுவலர் உள்ளார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சக்திவேல் வாதிடுகையில்,
யாருக்கும் எவ்வித சிறப்பு சலுகையும் இன்றி, செயல் அலுவலரே திருவிழாவை நடத்தலாம். இதில் மனுதாரருக்கு ஆட்சேபனை இல்லை. கிராமத்திலுள்ள பிறரும் இதை ஏற்றுக்கொள்வர். திருவிழா நடத்தப்பட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை. என வாதம் நடந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி,
ஒவ்வொரு கோயில் திருவிழாவின்போதும், கிராமம் முழுவதும் மற்றும் பிற பகுதிகளில் குப்பை சிதறடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட விழா சடங்குகள் நடத்த மற்றும் சிறப்பு சலுகை உரிமைகளை நிலைநாட்ட பலர் இந்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். அத்திருவிழாக்களின் விளைவாக உருவாகும் திடக்கழிவுகள் குறித்தோ அல்லது அதனால் ஏற்படும் சுகாதார பாதிப்பு அபாயம் குறித்தோ யாரும் கவலை கொள்வதில்லை. பல கிராமங்களில், கோயில் திருவிழாக்களைத் தொடர்ந்து தொற்றுநோய்கள் பரவுகின்றன. எவ்வித சிறப்பு சலுகையும் கோரப்போவதில்லை என மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜாதி, மதம் பாகுபாடின்றி இணைந்து திருவிழா நடத்த வேண்டும்
அதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திருவிழா நடத்த அனுமதிக்கப் படுகிறது. கோயில் சார்பில் யாருக்கும் எவ்வித சிறப்பு சலுகையும் அளிக்கப்படாமல், அப்பகுதி மக்கள் அனைவராலும் ஜாதி, மதம் பாகுபாடின்றி இணைந்து திருவிழா நடத்த வேண்டும். திருவிழாவை நடத்துவதென முடிவு செய்யப்படுமாயின், அப்பகுதிகளில் தற்காலிக குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கோயில் திருவிழா நடைபெறும் காலங்களில் கோயில் வளாகத்திற்குள் அல்லது ஊர்வலத்தின் போதோ எவ்விதத்திலும் பயன்படுத்தக்கூடாது, என உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















