மேலும் அறிய
சிறுபான்மை நலன் காக்க எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்தத்தை முறியடிப்போம் - சு.வெங்கடேசன் !
மனசாட்சி கொண்ட ஒவ்வொரு மனிதரையும் தட்டி எழுப்பும் பணியை நாம் மேற்கொள்வோம். இந்த மாநாட்டின் தீர்மானங்கள் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். - சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன்
Source : whatsapp
எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்தத்தை மக்கள் சக்தியால் முறியடிக்க வேண்டும்" – சு. வெங்கடேசன் எம்பி.
சு. வெங்கடேசன் எம்பி பேச்சு
"சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஒரு பெரும் அணிசேர்க்கையையும், கருத்துருவாக்கத்தையும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்தத் தேவையை உணர்ந்துதான் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு இந்த மாநாட்டை நடத்துகிறது. மிகுந்த மகிழ்ச்சியுடனும் எழுச்சியுடனும் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் இந்த முன்னெடுப்பு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மிக முக்கியமான முயற்சியாகும். தோழர் ராமகிருஷ்ணன் முன்மொழிந்த தீர்மானத்தில், ஆர்ப்பாட்ட அறைகூவலும் இடம்பெற்றுள்ளது.
குரலாக மாநிலங்களவையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனக்குப் பிறகு நிறைவுரையாற்றுவதற்காக அன்புத் தோழர் ஜான் பிரிட்டாஸ் அவர்கள் வந்திருக்கிறார்கள். உங்களைப் போலவே அவரது உரையைக் கேட்க நானும் ஆவலுடன் இருக்கிறேன். மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் அவர்களின் கொள்கைகளுக்கு எதிராக, இந்தியாவில் வெறுப்பு அரசியலை அவர்கள் எவ்வாறு முன்னெடுக்கிறார்கள் என்பதை நெஞ்சம் நிமிர்த்தி, துணிச்சலுடன் எதிர்த்து பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகச் சிலரே உள்ளனர். அவர்களில் ஒருவர் அன்புத் தோழர் ஜான் பிரிட்டாஸ். அவரது குரல் இன்று இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் குரலாக மாநிலங்களவையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சட்ட மசோதாவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு அரசியல் சூழல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் பாஜகவுக்கு மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தது; மாநிலங்களவையில் இல்லை. அதனால் பல சட்டங்கள் நிறைவேறாமல் தடுக்கப்பட்டன. தற்போது மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு போதிய பலம் உள்ளது. மக்களவையிலும் அதற்கான எண்ணிக்கையைப் பெற முயற்சித்து வருகின்றனர். மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்களின் குரல் நாடாளுமன்றம் முழுவதும் எதிரொலிக்கிறது. அதற்கு காரணம் அவர்களின் கொள்கையும் கோட்பாடுகளுமே. இந்தச் சட்டத்திருத்த மசோதா கடந்த மார்ச் 25-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஒன்றிய அரசு செயல்பட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவசரமாக டெல்லி வந்து மக்களவையில் கலந்து கொண்டு, இந்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
கற்பனை செய்ய முடியாது
இந்தியாவின் சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்கும் எந்த முயற்சியையும் நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற உறுதியை அவர்கள் வெளிப்படுத்தினர். ஒன்றிய அரசு எந்த நேரத்தில் மசோதாவை தாக்கல் செய்தால் எதிர்க்கட்சிகள் முழுமையாக வர முடியாது என்று கணக்கிட்டு செயல்படுகிறது. ஆனால் அந்தத் திட்டம் அப்போது தோல்வியடைந்தது. வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து வக்ஃப் சொத்துக்களை குறிவைத்தது போலவே, தற்போது சிறுபான்மை மக்களின் கல்வி, மருத்துவ மற்றும் சமூகச் சேவை நிறுவனங்களின் சொத்துக்களை குறிவைத்து இந்த எப்.சி.ஆர்.ஏ. சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுபான்மை மக்களின் கல்வி நிறுவனங்களும் அறக்கட்டளைகளும் இந்த நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, மருத்துவம், சமூகச் சேவை போன்ற துறைகளில் அவர்கள் செய்த பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. மதுரையை எடுத்துக்கொண்டாலே கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் இல்லாமல் இந்த நகரத்தின் வளர்ச்சியை கற்பனை செய்ய முடியாது. சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றவர்கள்தான்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தவறு செய்ததாகக் கூறி ஒட்டுமொத்த நிறுவனங்களின் சொத்துக்களையே பறிமுதல் செய்யும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது ஏற்க முடியாதது. ஏற்கனவே 2010-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் உள்ளன. அதற்கு மேல் இந்த புதிய சட்டத்திருத்தம் தேவையற்ற அச்சுறுத்தலை உருவாக்குகிறது. இந்தச் சட்டத்தின் நோக்கம் சிறுபான்மை நிறுவனங்களை அச்சுறுத்துவதும், அவர்களின் குரலை ஒடுக்குவதும்தான். மத உரிமை, மதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளுக்காக யாராவது குரல் கொடுத்தால், அவர்களது நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்தச் சட்டம் உள்ளது. ஒரு நிறுவனத்தின் ஒரு சிறிய பிரிவில் நிர்வாகக் குறைபாடு இருந்தால்கூட, அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான மொத்தச் சொத்துகளையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்த மசோதா வழிவகுக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஏற்பாடாகும்.
தீர்மானங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எப்.சி.ஆர்.ஏ. உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவே இந்தச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
எனவே, இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக மிகப்பெரிய மக்கள் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் பிரச்சினை அல்ல; இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பிரச்சினையாகும். இந்தச் சட்ட மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜக தனது பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும். ஆனால், 140 கோடி மக்களின் ஜனநாயகக் குரலுக்கு முன்னால் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. மத வெறுப்பைத் தூண்டும், மதச்சார்பற்ற அரசியலைச் சீர்குலைக்கும் இந்த முயற்சிக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கினால் மட்டுமே இந்தச் சட்டத்தை முறியடிக்க முடியும். அது நிச்சயமாக நம்மால் முடியும். மனசாட்சி கொண்ட ஒவ்வொரு மனிதரையும் தட்டி எழுப்பும் பணியை நாம் மேற்கொள்வோம். இந்த மாநாட்டின் தீர்மானங்கள் வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" - எனவும் பேசினார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















