மேலும் அறிய
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
திருக்கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

மீனாட்சியம்மன் கோயில்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 2026: முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம்
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 2026 பெருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் எஸ்.ராஜேந்திரன், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் இன்று (20.08.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கிய முக்கிய அறிவுரைகள்..," மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 06.09.2026 முதல் 02.10.2026 வரை நடைபெறவுள்ளது. 06.09.2026 முதல் 16.09.2026 வரை (ஆவணி 20 முதல் ஆவணி 30 வரை) திருக்குடமுழுக்கு பெருவிழாவிற்கான யாகசாலை பூஜைகள், 16.09.2026 புதன்கிழமை (ஆவணி 30) அன்று பரிவார மூர்த்திகள் மஹாகும்பாபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், 17.09.2026 வியாழக்கிழமை (ஆவணி 31) அன்று காலை 07.40 மணிக்கு மேல் 08.10 மணிக்குள் திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நன்னீராட்டு பெருவிழா, 18.09.2026 முதல் 02.10.2026 வரை (புரட்டாசி 01 முதல் புரட்டாசி 15 வரை) மண்டல பூஜைகள் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவினை எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையின்றி பாதுகாப்பான முறையில் நடத்தி முடித்திட ஒவ்வொரு துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
பக்தர்கள் வருகை மற்றும் பாதுகாப்பு: பக்தர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோயிலுக்குள் மற்றும் கோபுரப் பகுதிகளுக்குச் செல்வதற்கான வழிகளை முறைப்படுத்தி, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக தடையற்ற குடிநீர் மற்றும் முறையான சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டும். சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகளில் கூடுதல் தற்காலிக கட்டணமில்லா காலணி பாதுகாப்பகங்களை அமைக்க வேண்டும். எல்.இ.டி (LED) திரைகள் & பார்க்கிங்: கும்பாபிஷேக நிகழ்வுகளைப் பக்தர்கள் தெளிவாகக் கண்டு தரிசிக்க ஏதுவாகப் போதுமான இடங்களில் LED வண்ணத்திரைகள் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் கூடுதல் வாகன நிறுத்துமிட (Parking) வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதுகாப்பு கருதி மின்மாற்றிகளைச் (Transformer) சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைக்க வேண்டும். பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாகச் சரிசெய்வதோடு, தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும். திருக்கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் மற்றும் வீதிகளில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக திருக்கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் குடிநீர், கழிப்பறை, நடைபாதை, தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், கழிப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பழுதான தெருவிளக்குகள் மற்றும் நடைபாதைகளை உடனடியாக சீரமைக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் உத்தரவிட்டார்.
உடனடி நடவடிக்கை
திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சியின் மூலம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் சேர்ந்தவுடன் அவற்றை உடனடியாக மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி அப்பகுதிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றி பாதுகாப்பாகவும், மனநிறைவோடும் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கள ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள், மேலாளர்கள், கண்காணிப்பாளர்கள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















