மதுரையில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது செய்ய தாமதம் ஏன்?
மதுரையில் வரதட்சணை கொடுமையால் பெண்தற்கொலை என உறவினர்கள் புகார்- இதுகுறித்து செல்லூர் காவல்துறை வழக்குப்பதிவு.

பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன்- தனபாக்கியம் ஆகியோரது மகன் ரூபன்ராஜ் என்பவருக்கும், உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி- செல்வி என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. தொடக்கத்தில் 300 பவுன் நகை வரதட்சணையாக மணமகன் வீட்டார் தரப்பில் கேட்டபோது 150 பவுன் நகைகள் மட்டுமே பெண்ணுக்கு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக இருவருக்குமிடையே மற்றும் குடும்பத்தினருக்கிடையே கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் வரதட்சணை மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக செல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக ரூபன்ராஜ் வீட்டில் பிரியதர்ஷினியுடன் வாழ முடியாது என கண்டிப்புடன் கூறியதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதனையடுத்து கணவர் ரூபன்ராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க உள்ளதாக கிடைத்த தகவலால், மீண்டும் தன்னுடன் கணவரை சேர்த்து வைக்கக்கோரி மாமனார், மாமியாரை சந்தித்து பேச பிரியதர்ஷினி நேற்று முன்தினம் மதுரைக்கு சென்ற நிலையில் மாமனார், மாமியார் ரூபன்ராஜனுடன் வாழ வைக்க முடியாது எனக்கூறி 50 பவுன் நகை, 10 லட்ச ரூபாய் பணம் இல்லாமல் இந்த வீட்டில் இருக்க முடியாது என பேசியதால் மனமுடைந்த பிரியதர்ஷினி அதிகமான மருந்து மாத்திரை சாப்பிட்டு கையில் வெட்டுக்காயத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறி அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக செல்லூர் காவல்நிலையத்தில் பெற்றோர் அக்னி-செல்வி புகார் அளித்தனர். இதனையடுத்து பிரியதர்ஷினி மரணத்தை சந்தேக மரணமாக பதிவு செய்து கணவர் ரூபன்ராஜ், மாமனார் இலங்கேஸ்வரன், மாமியார் தனபாக்கியம், உறவினர்கள் ரமேஷ், உமாமகேஸ்வரி, சிங்கத்தமிழன், வாசுகி தேவி, முகுந்தன், சாந்தினிதேவி, தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்கள் அழுத்தம் காரணமா?
இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் மகள் உயிரிழந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யும் வரை மகளின் உடலை பெற மாட்டோம் எனக்கூறி பிரியதர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை பிணவறை அருகில் ஒருமணி நேரமாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பிரியதர்ஷினி ரூபன்ராஜ் வீட்டில் இருந்து கையில் வெட்டுக்காயத்துடன் அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மணமகன் வீட்டாரை கைது செய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். மேலும் செல்லூர் காவல்நிலையத்தில் பிரியதர்ஷினி பெற்றோர் கொடுத்த புகாரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய தாமதம் செய்ததாகவும், ரூபன்ராஜ் தந்தை அதிமுகவில் இருப்பதாகவும், செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா போன்ற முக்கிய பிரமுகர்கள் அழுத்தம் காரணமாக வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக கோட்டாட்சியர் மதுரை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் அடிப்படையில் போரட்டம் கைவிடப்பட்டது.
கைது செய்ய தமாதம் ஏன்?
இவ்வழக்கில் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் ஏற்பட்ட இறப்பு வழக்கு என்பதால் பிரேத பரிசோதனை விசாரணைக்காக கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிவில் கைது நடவடிக்கை இருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் தெரிவித்தார்.





















