மேலும் அறிய
மதுரை மேயரின் கணவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு கடும் எதிர்ப்பு... அடுத்த விசாரணை எப்போது?
மேயரின் கணவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பல வணிக கட்டிடங்களுக்கு வரி குறைத்து மோசடி செய்துள்ளார், டிஐஜி விசாரணைக்குழு விசாரணை நடத்திவருவதால் ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பு வாதம்.

மேயர் கணவர் பொன்வசந்த்
Source : whats app
மேயரின் கணவர் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை செப்-10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரி குறைப்பு
மதுரை மாநகராட்சி ஆணையாளராக தினேஷ்குமார் பணியாற்றியபோது மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக கட்டடங்கள் நிறுவனங்கள், மண்டபங்கள், விடுதிகள், மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்கான வரி வசூல் தொடர்பாக ஆய்வு நடத்தியபோது 2022-2023-ஆம் ஆண்டுகளில் பல கோடி ரூபாய் வரை வரி வசூலில் முறைகேடு செய்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இந்த வரி முறைகேடு முழுவதும் அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தி வரி குறைப்பு செய்தது ஆய்வில் தெரிய வந்த நிலையில் இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினருக்கு ஆணையாளர் தினேஷ்குமார் புகார் அளித்திருந்தார்.
நடைபெற்ற விசாரணை
இதனையடுத்து இந்த புகாரின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வரி குறைப்பு செய்வதற்காக அதிகாரிகளின் பாஸ்வேர்டுகளை முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து தற்போதைய மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த புகாரினை தீவிரமாக விசாரணை நடத்தி முறைகேடுகளை வெளிக்கொண்டு வர வேண்டுமென கூறிய நிலையில் வழக்கானது மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அதன்படி வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புகுழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன்,ரவிச்சந்தி ரன், ஜமால் நஜிம், பாலமுருகன், கருணாகரன், ரவி, முகம்மதுநூர், செந்தில்குமரன், ரெங்கராஜன், கார்த்திக், சகா உசேன், ராஜேஸ்குமார், சதீஸ், தனசேகரன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
டிஐஜி விசாரணை
மேலும் இந்த முறைகேடு எதிரொலியாக மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா, நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் கைதான மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுபடி டிஐஜி அபினவ்குமார் தலைமையிலான விசாரணைக்குழு விசாரணை நடத்திவரும் நிலையில் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
33 வரி பதிவுகளை திருத்தம் செய்துள்ளார்
இந்நிலையில் வரி முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலுள்ள மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வரி முறைகேடு விவகாரத்தில் கைதான பில் கலெக்டர் ரவிச்சந்திரன் தனிப்பட்ட ஒருவரை சட்டவிரோதமாக பணிக்கு வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டர் பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி 33 வரி பதிவுகளை திருத்தம் செய்துள்ளார் எனவும், மேயரின் கணவர் பொன் வசந்த் தனது செல்வாக்கை பயன்படுத்தி பல வணிக கட்டிடங்களுக்கான வரியை குறைத்துள்ளார்.
ஜாமீன் வழங்க எதிர்ப்பு
காளவாசல் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு வரி குறைப்பு செய்ய 10 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார். மேலும் டிஐஜி தலைமையிலான விசாரணைக்குழுவும் இந்த முறைகேடு வழக்கை விசாரித்துவருகிறது, எனவும் இதனால் ஜாமின் கோரியுள்ள இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையை செப்.9ஆம் தேதிக்கும், மேயரின் கணவர் பொன் வசந்தின் ஜாமின் மனுவை செப்.10ஆம் தேதிக்கும் விசாரணைக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















