TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, நாளை(04.12.25) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் ‘டிட்வா‘ புயல் இலங்கையை தாக்கியது மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பெரும்பாலான மாவட்டங்களில் மழையை கனமழையை கொடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு அருகே டிட்வா புயல் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டிருந்தது. இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலு குறைந்தது. தற்போது வடக்கு கடலோர மாவட்டங்கள் மீது நிலவி வருவதால் இதன் தாக்கத்தால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மேகமூட்டமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் காலையில் இருந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை எந்த மாவட்டங்களில் கன மழை.?
இந்நிலையில், நாளை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் மீண்டும் ஒரு இடைவேளைக்குப் பிறகு, சென்னை அருகே கடுமையான மேகங்கள் உருவாகின்றன என்றும், அதன் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று(03-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். பொதுவாக வெப்பநிலை 24-26 செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
நாளை (04-12-2025)
மேலும், சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.




















