ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு: அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை !
12 ஸ்லீப்பர் கோச்களை கொண்ட ஒரு ரயில் குறைவான பாதுகாப்பு பணியாளர்களே இருப்பதால் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலை வருகிறது.
இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயிலில் தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் சாதாரண பயணிகள் ரயில் முதல் வந்தே பாரத் வரையிலான அதிவேக சொகுசு ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. ரயிலின் ஸ்லீப்பர் கோச்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் இருப்பது வழக்கம். 12 ஸ்லீப்பர் கோச்களை கொண்ட ஒரு ரயில் குறைவான பாதுகாப்பு பணியாளர்களே இருப்பதால் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலை வருகிறது. இதனால் ரயில்களில் குறிப்பாக பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவங்கள், பாலியல் அத்துமீறல் நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில், ரயில்வே பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதாவது அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் கோச்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உள்ளது. இந்த ஆண்டு 11,000க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளில் கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக தயாரிக்கப்படும் அனைத்துப் பெட்டிகளிலும் அவசர பட்டன்கள் (SOS) பொருத்தப்படும். அவசர காலங்களில் இந்தப் பட்டன்களை அழுத்தினால் பாதுகாப்புப் படைக்கு உடனடியாகத் தகவல் அனுப்பப்பட்டு உதவி வழங்கப்படும்.
குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். பெட்டிகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் HD தரத்தில் இருக்கும், மேலும் குறைந்தது ஒரு மாதத்திற்கான பதிவுகள் சேமிக்கப்படும். ரயிலின் ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் பெண்கள் இருக்கும் கோச்களில் அமைக்கப்படும் அவசர கால பட்டன்களை மொபைல் பயன்பாட்டுடன் இணைக்கப்படும், இதன் மூலம் பெண்கள் அவசர காலங்களில் மொபைல் மூலமாகவும் உதவி கோர முடியும்.
ரயில்வே 700க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை ரயில்வே உணர்திறன் மிக்க அல்லது மிகவும் உணர்திறன் மிக்க பட்டியலில் வைத்துள்ளது. அங்கு பெண் RPF அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க ஒரு வலுவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 'மெரி சஹேலி' போன்ற முயற்சிகள் பெண் பயணிகளுக்கு நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை அளித்துள்ளன என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















