கொளுத்தும் கோடை வெயிலுக்கு இடையில் "எல்லோ அலர்ட்" விடுத்த இந்திய வானிலை மையம்.. எந்த பகுதிக்கு தெரியுமா?
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (மே 13) தொடங்கியுள்ளது. அதேபோல, கேரளாவில் வரும் 27-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2023-ல் ஜூன் 7-ம் தேதியும், கடந்த 2024-ல் மே 30-ம் தேதியும் பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு அதைவிட 4 நாட்கள் முன்னதாக தொடங்க உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த தென் மேற்கு பருவமழை காலத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் மழை பொழிவு கிடைக்கும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் பருவமழை படிப்படியாக குமரிமுனை, கேரளா என வட மாநிலங்களுக்கும் பரவும். கொளுத்தும் கோடைக்காலத்தை தொடர்ந்து தொடங்கும் பருவமழை என்பதால் இந்த தென்மேற்கு பருவமழை மீதான எதிர்பார்ப்பு எப்போதுமே அதிகம். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் ஐந்து நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த இந்திய வானிலை மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் முன்னெச்சரிக்கை விடுத்தது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட முன்கூட்டியே துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் அடுத்த ஐந்து நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுடன் பல்வேறு மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இடுக்கி, பத்தனம்திட்டா, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும் எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ., வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.





















