மேலும் அறிய
கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை முடக்குவோம் - திருச்சி சிவா காட்டம் !
தமிழர்களின் வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு யார்?, தமிழர்களின் நாகரீகத்தை மறைக்க நினைக்கும் பாஜகவை தமிழகத்திக்குள் விட கூடாது - திருச்சி சிவா பேச்சு.

மாணவரணி ஆர்ப்பாட்டம்
Source : whats app
கீழடி அகழாய்வை முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்குவோம் என மதுரையில் திருச்சி சிவா பேசினார்.
மதுரையில் தி.மு.க., மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
கீழடி அகழாய்வை அங்கீகரிக்க மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மதுரையில் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில் திமுக மாணவரணி மாநில செயலாளர் இரா.ராஜீவ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது. இதில் திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவரணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்ற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் முகமூடியை அணிந்தனர்.
கீழடி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிட வேண்டும்
இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்ற போது தமிழ் தொன்மையான மொழி கீழடி அகழாய்வு நிரூபணம் செய்துள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கீழடி அகழாய்வு அங்கீகரிக்க வேண்டும். என, முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதனையடுத்து கீழடி அகழ்வாய்வு முடிவுகளை வெளியிட கோரி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தி.மு.க துணை பொது செயலாளர் திருச்சி சிவா
திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா பேசுகையில் "ஹரப்பா நாகரீகத்திற்கு முன் தமிழர் நாகரீகம் இருந்துள்ளது. அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசு நம்பிக்கையின் அடிப்படையில் இந்திய நாகரீகத்தை கூறுகிறது. தமிழக அரசு ஆதாரத்தின் அடிப்படையில் தமிழர்களின் நாகரீகத்தை கூறுகிறது. சேது சமுத்திரத் திட்டம் வந்திருந்தால் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கும். ராமர் பாலம் இருக்கிறது என கூறி பாஜக சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியது. ஒன்றிய அரசின் சார்பில் தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீராம் கீழடி ஆய்வில் ஒன்றுமில்லை என கூறினார். பின்னர் தமிழக அரசு நடத்திய பல்வேறு ஆச்சர்யம் கிடைத்துள்ளது.
கீழடி விவகாரத்தில் நாம் போராடி வெற்றி காண வேண்டும்
இரும்பை முதன் முதலாக தமிழர்கள் கண்டுபிடித்தனர். தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன் வேளாண் தொழில் செய்துள்ளார். கீழடி அகழாய்வு போல இந்தியாவில் வேறு எந்தவொரு பகுதியிலும் அகழாய்வு நடைபெறவில்லை. ஒன்றிய அரசு தமிழ்நாடு மீது பண்பாட்டு போர் தொடுத்துள்ளது. பண்பாட்டு போரில் பாஜகவுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள எட்டப்பர்கள் (அதிமுக) துணை போகிறார்கள். ஒன்றிய அரசின் போருக்கு திமுகவினர் அஞ்ச மாட்டார்கள், பாஜகவின் வஞ்சக செயலை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கீழடி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசுவேன், கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு வெளியிடவில்லை என்றால் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்குவோம். நாடாளுமன்றத்தில் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க உள்ளோம். தமிழர்களின் வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு யார்?, தமிழர்களின் நாகரீகத்தை மறைக்க நினைக்கும் பாஜகவை தமிழகத்திக்குள் விட கூடாது. கீழடி விவகாரத்தில் நாம் போராடி வெற்றி காண வேண்டும்" என கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















