3,500 கிலோ அரிசியில் புளியோதரை....25 ஆயிரம் பேருக்கு மெகா அன்னதானம்..!
3,500 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட புளியோதரை பிரசாதம் வழங்கி அசத்திய விழாக்குழுவினர்.25 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட மெகா அன்னதானம் வழங்கப்பட்டது.
வேடசந்தூர் அருகே கள்ளியடி குருநாதரின் 82-வது குருபூஜையை முன்னிட்டு 25 ஆயிரம் பேருக்கு மெகா அன்னதானம் வழங்கப்பட்டது. 3,500 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட புளியோதரை பிரசாதம் வழங்கி விழாக்குழுவினர் அசத்தினர்.
மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே உள்ள பில்லிச்சேரியைச் சேர்ந்தவர் சபாபதி. கடந்த 1874-ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 16-வயதில் வீட்டைவிட்டு வெளியேறினார். அதன்பின்னர் வடமாநிலங்களில் உள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரைக்கு வந்தார்.
அதன்பின்னர் புதுப்பட்டியில் உள்ள கள்ளி மரத்தடியில் தங்கியிருந்தார். ஒரு முறை அவர் அமர்ந்து தியானம் செய்துள்ளார். அப்போது இந்த பகுதியில் மழை பெய்தபோது, அவர்மீது மட்டும் மழை நீர் படாமல் இருந்துள்ளது. இதனைக்கண்டு ஆச்சரியமடைந்த ஊர்மக்கள் அவரிடம் ஏதோ சக்தி உள்ளதாக எண்ணி அவரை கள்ளியடி சுவாமிகள் என்று அழைத்து வந்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கு : முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை.. துப்பு துலங்குமா?
அங்கு தங்கியிருந்து ஊருக்கும், ஊர் மக்களுக்கும் பல நல்ல காரியங்களை செய்து வந்த அவர் கடந்த 1941 ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி ஜீவசமாதி அடைந்தார். அவர் நினைவாக ஊர் மக்கள் அந்த பகுதியில் கோவில் கட்டி ஆண்டு தோறும் வெகு விமரிசையாக குரு பூஜை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கள்ளியடி குருநாதரின் 82-வது குரு பூஜை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து புதுப்பட்டியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று கள்ளியடி குரு நாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 21 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த விழாவை முன்னிட்டு 3 ஆயிரத்தி 500 கிலோ அரிசி (35 மூட்டை), 600 கிலோ நிலக்கடலை, 30 டின் நல்லெண்ணெய், 53 டின் கடலெண்ணெய் உள்ளிட்ட பொருட்களால் புளியோதரை தயார் செய்யப்பட்டு ஒரு அறையில் கொட்டி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மாலை 5 மணி அளவில் கோவில் வளாகம், ஊர் மந்தை மற்றும் சாலைகளில் அமர்ந்து பக்தர்கள் அன்னதானத்தில் கலந்துகொண்டனர். டாட்டா ஏசி வாகனங்களில் அண்டாக்களில் எடுத்துச் சென்று அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த மெகா அன்னதான நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் கள்ளியடி குருநாதர் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.





















