"விஜய் அங்கிள் ஒரு REQUEST" பள்ளி மழலைகள் கோரிக்கை நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
சிவகங்கை மாவட்டத்தில், வேங்கைபட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள், தாங்கள் தினமும் பள்ளிக்கு நான்கைந்து கிலோமீட்டர் நடந்தே செல்வதால் முறையான பேருந்து வசதி வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டி கிராமம் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், பிரான்மலையிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.
சுமார் 1,000 குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிங்கம்புணரி மற்றும் பிரான்மலை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
வேங்கைப்பட்டியில் 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருவதால். இதனால் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தினமும் அருகிலுள்ள ஊர்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பேருந்து வசதி இல்லாததால், மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதிகாலையிலேயே வீட்டை விட்டு புறப்படும் அவர்கள், பல நேரங்களில் சாலையில் செல்லும் முகம் தெரியாத இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்டு பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பெண் குழந்தைகள் முகம் தெரியாத நபர்களுடன் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி நேரங்களில் பேருந்து இயக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் வேங்கைப்பட்டி பெற்றோர்கள், "மாற்றத்திற்கான ஆட்சியாக இருக்கும் தற்போதைய அரசில் எங்கள் கிராமத்திற்கும் மாற்றம் வேண்டும். எங்க வீட்டுப் பிள்ளை நீங்கள்தான்... உங்களுக்குத்தான் ஓட்டு போட்டோம். காலை, மாலை பள்ளி நேரங்களில் சிங்கம்புணரி மற்றும் பிரான்மலைக்கு பேருந்து இயக்கினால், நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்விப் பயணம் பாதுகாப்பாக அமையும். எங்கள் ஊர் மாணவச் செல்வங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுங்கள்" என உரிமையோடு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பள்ளிச் சிறுமி, சிறுவர்கள், "விஜய் அங்கிள்... எங்களுக்கு பள்ளிக்குப் போக பஸ் வேண்டும். நாங்கள் தினமும் நான்கு, ஐந்து கிலோமீட்டர் நடந்தே செல்கிறோம்" என மழலைக்குரலில் வேண்டுகோள் விடுத்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















