மேலும் அறிய
Advertisement
"காவி அணிந்தவர்கள் எல்லாம் எதிரி அல்ல; திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம்; பிரிக்க முடியாது" - அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு !
தமிழகத்தில் இனி திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது, காவி அணிந்தவர்கள் எல்லாம் எங்கள் எதிரி அல்ல; - பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேச்சு.
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் பகுதியில் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு...," எந்த தேர்தலிலும் தோற்காத ஓரே தலைவர் கருணாநிதி. 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை. 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர், 5 முறை முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி ஒரு கட்சிக்கு 50 ஆண்டு கால தலைவராக இருந்து வரலாறு படைத்தவர். திரைத்துறையில் இருந்து முன்னிலை பெற்று தமிழகத்தின் தலைவராக உயர்ந்தவர் கருணாநிதி. நடிகர்களாலும், இசையமைப்பாளர்களாலும், பாடலாசிரியர்களாலும் படங்கள் ஓடியது உண்டு, ஆனால் கதை வசனத்தால் படம் ஓடியது என்றால் அது கருணாநிதியால் தான். கருணாநிதி வசனம் இல்லை என்றால் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் இல்லை, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் பேருந்து முதலாளிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு இன்றைக்கு பேருந்துக்கு நம்ம பேருந்து நம் பேருந்து என உரிமை கொண்டாடுகிற வகையில் பேருந்துகளை அரசு இயக்க நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதி.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவில் இருக்கிறதோ இல்லையோ குடிநீர்த்தொட்டிகளை உருவாக்கியவர் கருணாநிதி, கருணாநிதி இல்லாவிட்டால் நாடு மலிந்திருக்கும். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்த தலைவர் கருணாநிதி எனவும், தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பதை போல முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். பெரியார், அண்ணா,கலைஞர் ஆகியோரின் மொத்த கொள்கைகளை கொண்ட ஆட்சியை நடத்துவதே திராவிட மாடல் ஆட்சி, எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல். சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை ஒரு மாநகராட்சியாக உருவாக கருணாநிதியே காரணம். தென் மாவட்ட மக்கள் பொருளாதாரத்தை செலவு செய்யாமல் அலையாமல் சென்னைக்கு அடுத்து மதுரைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அமைத்து கொடுத்தது கருணாநிதி போட்ட பிச்சை. தமிழுக்கு முழுக்க முழுக்க செம்மொழி அந்தஸ்து கிடைக்க காரணம் கருணாநிதி தான். இந்தியாவிலேயே முதன்முதலில் கொரோனாவை ஒழித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் கொரோனா உடையணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றதால் அமைச்சர்களான நாங்களும், எம்எல்ஏக்களும் கொரோனா உடை அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றோம்.
எங்களை பார்த்து மருத்துவர்களும் பயமின்றி கொரோனா சிகிச்சையை மேற்கொண்டனர். காவி அணிந்தவர்கள் எல்லாம் எங்கள் விரோதிகள் அல்ல. காவி அணிந்து நல்லதை செய்தால் அவர்கள் எங்கள் நண்பர்கள்.
இனி திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்க முடியாது, திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறதோ இல்லையோ சென்னையில் கலைஞர் மருத்துவமனை வந்துவிட்டது. மதுரையில் விரைவில் கலைஞர் நூலகம் வர உள்ளது. எங்கள் மொழி தாய்மொழி தமிழ், எங்கள் சாமிக்கு எங்கள் மொழி தான் புரியும். ஆனால் புரியாத மொழியிலே சாமிக்கே தெரியாத மொழியாலே பூஜை செய்து, கும்பத்திலே தண்ணியை ஊற்றி பின்பு மண்டல பூஜையின் போது எங்களை அருகில் விடாமல் மணியையும் தட்டையும் வைத்துகொள்கின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றி ஆன்மீக சாதனை படைத்தது திமுக” என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பேச அழைக்காமல் அமைச்சர் ஏவ வேலுவை மாவட்ட செயலாளர் தளபதி அழைத்தபோது அமைச்சர் எ.வ வேலு பழனிவேல் தியாகராஜனை பேச சொல்லுமாறு கூறினார். இருந்தபோதிலும் மாவட்ட செயலாளர் அவரை அழைக்காத நிலையில் அமைச்சர் எ.வ வேலு பேச தொடங்கிய போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடம் உங்களிடம் நேரத்தை எடுத்துக் கொண்டேன் என சமாளித்தார். திமுக பொதுக்கூட்டம் மேடையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பேச வாய்ப்பு வழங்காதது அவர்கள் ஆதரவாளர்களிடையே மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
கல்வி
பொழுதுபோக்கு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion