தமிழக வரலாற்றில் முதல்முறை! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி.சினேகா அதிரடி உத்தரவு!
"மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள், வரலாற்றிலேயே முதன்முறையாகசுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் நவீனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது."

தமிழ்நாட்டில் 2027ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள், வரலாற்றிலேயே முதன்முறையாக "சுய கணக்கெடுப்பு (Self Enumeration)" மற்றும் "டிஜிட்டல்" முறையில் நவீனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இம்முறை இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு (HLO) வரும் 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக முதன்மையான மக்கள்தொகை கணக்கெடுப்பு (PE) பணிகள் 2027 பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன.
பொதுமக்கள் தாங்களாகவே விவரங்களை பதிவிடும் எளிய வழிமுறை முதற்கட்ட வீட்டுபட்டியல்
கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் தங்களின் விவரங்களைத் தாங்களாகவே இணையதளத்தில் பதிவிடும் "சுய கணக்கெடுப்பு" வசதி 2026 ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் https://se.census.gov.in/ என்ற இணையதள முகவரியில், ஒரு குடும்பத்திற்கு ஒரேயொரு கைபேசி எண் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் கேட்கப்படும் 34 கேள்விகளுக்கு விடையளித்த பின், 12 இலக்க தனித்துவ அடையாள எண் (Census ID) குறுஞ்செய்தி மூலம் கைபேசிக்கு அனுப்பப்படும். பின்னர், தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்பாளர் நேரில் வரும்போது, பொதுமக்கள் இந்த 12 இலக்க அடையாள எண்ணை அவரிடம் தெரிவித்தால் போதுமானது.
மாவட்ட அளவிலான கட்டமைப்பு மற்றும் பொறுப்பு அதிகாரிகள் நியமனம்
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலராகவும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் மாநகராட்சி அளவிலான முதன்மை அலுவலராகவும் செயல்படுவர். மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளுக்கு வட்டாட்சியர்களும், நகராட்சிப் பகுதிகளுக்கு நகராட்சி ஆணையர்களும், பேரூராட்சிப் பகுதிகளுக்கு செயல் அலுவலர்களும், மாநகராட்சிப் பகுதிகளுக்கு மண்டல அலுவலர்களும் என மொத்தம் 14 பொறுப்பு அலுவலர்கள் (Charge Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தரவுகளைக் கையாள்வதற்காக 18 தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 2 பல்பணி பணியாளர்கள் தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
களப்பணியாளர்களுக்கான முறையான பயிற்சிகள் மற்றும் கண்காணிப்பு
இப்பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 2 முதன்மைப் பயிற்சியாளர்கள் மற்றும் 60 களப்பணி பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மூலமாக, தோராயமாக 2,357 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 363 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குரிய பயிற்சி வகுப்புகள் 2026 ஜூலை 6 முதல் ஜூலை 16 வரை நடத்தப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி முடிந்தவுடன், இந்த 2,357 கணக்கெடுப்பாளர்களும் மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வர். இவர்களின் களப்பணியை 363 மேற்பார்வையாளர்கள் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
அரசு திட்டங்களுக்கு அடிப்படை: ஆட்சித்தலைவரின் முக்கிய வேண்டுகோள்
அரசின் அனைத்து எதிர்கால வளர்ச்சித் திட்டப் பணிகளும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே செயல்படுத்தப்பட உள்ளன. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும், 2026 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை கணக்கெடுப்பாளர்கள் தங்கள் இல்லங்களுக்கு வரும்பொழுது எவ்விதத் தவறுமின்றி சரியான விவரங்களை வழங்கி முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பொதுமக்களால் வழங்கப்படும் அனைத்துத் தனிநபர் விவரங்களும் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















