Vande Bharat: 160 கிமீ வேகம்..! ஆனால் மாடு முட்டினால் கூட தாங்காது - வந்தே பாரத் ரயில், மோடிக்கு விஷயம் தெரியுமா?
Vande Bharat Train Safety: மாடு முட்டினால் கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவில் தான் வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு இருப்பதாக ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vande Bharat Train Safety: வந்தே பாரத் ரயிலின் முதல் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ரயில்:
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட செமி ஹை ஸ்பீட் ரயிலான வந்தே பாரத், ரயில்வே துறையின் மிகவும் முதன்மையான ரயில் சேவையாக கொண்டாடப்படுகிறது. வாரணாசி மற்றும் டெல்லி இடையேயான நாட்டின் முதல், வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதான பகுதிகளையும் இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து விஜயவாடா, கோவை மற்றும் திருநெல்வேலி போன்ற பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் அந்த ரயில்களின் பாதுகாப்பு தொடர்பான அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
”மாடு முட்டினால் கூட தாங்காது”
ரயில்வே பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில், “ வந்தே பாரத் ரயில்கள் கால்நடைகள் குறுக்கே ஓடும்போது கூட கடுமையான விபத்துகளுக்கு ஆளாகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், “ வந்தே பாரத் ரயிலின் முதல் பெட்டியானது வழக்கமான ரயில்களின் இன்ஜின் பெட்டிகளை விட மிகவும் இலகுவானது என்றும், ஏதேனும் தடங்கல் அல்லது கால்நடைகள் குறுக்கே ஓடுவது கூட அதிக வேகத்தில் பயணிக்கும்போது கடுமையான விபத்துக்கு வழிவகுக்கும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையரால் உருவாக்கப்பட்ட அறிக்கை, அதிவேகமாக இயக்கப்படும் ரயில்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
லெவல் கிராசிங்கை அகற்ற பரிந்துரை:
ரயில்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க, உறுதியான வேலி அமைப்பதை உறுதி செய்யுமாறு ரயில்வே அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ரயில்கள் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் பகுதிகளில் லெவல் கிராசிங்குகள் இருப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே வழக்கமான அத்துமீறல் மற்றும் கால்நடைகள் நுழைவு நடைபெறும் இடங்களை கண்டறிந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்களை நிறுத்துதல், சீரான இடைவெளியில் ரோந்து மற்றும் கால்நடைகளுடன் விவசாயிகள் கடந்து செல்ல சுரங்கப்பாதையை அமைத்தல் போன்ர வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடிவமைப்பு விவரங்கள்:
வந்தே பாரத் ரயில்களின் முன்பக்க கூம்பு பகுதி ' காற்றுடனான மோதல் ஆற்றலில் சிலவற்றை நொறுக்கி அதை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, முன்புறத்தில் உள்ள கால்நடை பாதுகாப்பு தடையை அகற்றி, அதனிஅ திசை திருப்பும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வழக்கமான ரயிலின் இன்ஜினுடன் ஒப்பிடும்போது இலகுவானதாக உள்ளது. இந்திய ரயில்வேயின் EMUS, MEMUS மற்றும் உலகில் எங்கிருந்தும் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் கூட இதே போன்ற ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன. இந்த காரணத்திற்காக இது ரயிலை குறைவான பாதுகாப்பாக மாற்றாது," என்று சென்னையின் ICF-ன் முன்னாள் முதன்மை தலைமை இயந்திரவியல் பொறியாளர் சுப்ரான்ஷு தெரிவித்துள்ளார். இவரது தலைமையிலான குழுதான் வெறும் 18 மாதங்களில் முதல் வந்தே பாரத் ரயிலை உருவாக்கி சரித்திரம் படைத்தது.
நாடு முழுவதும் வந்தே பாரத்:
டிசம்பர் 26, 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 136 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயங்கி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும், 62 வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான வந்தே பாரத் ரயில்கள், நீண்ட தூர பயணத்திற்கான புதிய ஸ்லீப்பர் வகுப்பு ரயில்கள் உட்பட, உற்பத்தி பிரிவுகளில் உற்பத்தியின் பல்வேறு நிலைகளில் உள்ளன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, முன்னணி ரயில் பெட்டிக்கு சேதம் விளைவிக்கும் வகையில் பல மாடுகள் மோதியுள்ளன. அதிக வேகத்தில் கால்நடைகள் மோதினால் கடுமையான விபத்துக்கள் ஏற்படக்கூடும் என்ற கவலையை பாதுகாப்பு அறிக்கை குறிப்பாகக் குறிப்பிட்டுள்ளது. பல வழித்தடங்களில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ள நேரத்தில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

