கையால் மலம் அள்ளும் தொழில்.. உயிரிழப்பு பதிவாகவில்லை.. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!
மனித கழிவை மனிதர்களே அகற்றும் பணியில் ஈடுபடும்போது எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட பிறகும், மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம் இன்னும் தொடர்ந்து வருவதாக சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் போன்ற காரணங்களை காட்டி பாகுபாடு காட்டுவது அரசியலமைப்பு சட்டப் பிரிவு 15இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவல தொழிலில் சாதியின் அடிப்படையில் ஆட்களை பணி அமர்த்துவது மனிதத்தையே கேள்விக்குள்ளாக்கும் விதமாக உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், மனித கழிவை மனிதர்களே அகற்றுகையில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மனித கழிவை மனிதர்களே அள்ளும் அவலம்:
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, "சாக்கடை சுத்தம் செய்யும்போது ஏற்படும் இறப்புகளுக்கான இழப்பீடு அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறது.
(முந்தைய நிர்ணயிக்கப்பட்ட தொகை, அதாவது ரூ.10 லட்சம்) 1993-ம் ஆண்டு முதல் இது பொருந்தும். தற்போது, ரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட அரசால் செலுத்தப்பட வேண்டிய தொகையாக இருக்கும். அதாவது, மத்திய, யூனியன் பிரதேசம் அல்லது மாநில அரசு இத்தொகையை செலுத்த வேண்டும்.
மத்திய அரசு அதிர்ச்சி தகவல்:
அதாவது, சாக்கடை உயிரிழப்புகளுக்கு இப்போது ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இறந்தவரைச் சார்ந்து வாழ்ந்தவருக்கு அத்தகைய தொகை வழங்கப்படாமல் இருந்தால் அத்தொகை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், இது இனிமேல் இழப்பீடாக செலுத்தப்பட வேண்டிய தொகையாக இருக்கும்.
அதேபோல், சாக்கடை கால்வாயில் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் ஆனவர்களுக்கு, இயலாமையின் தீவிரத்தைப் பொறுத்து, இழப்பீடு வழங்கப்படும். இருப்பினும், குறைந்தபட்ச இழப்பீடு ரூ. 10 லட்சத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
இயலாமை நிரந்தரமாக இருந்தால், பாதிக்கப்பட்டவரை பொருளாதார ரீதியாக பலவீனமானவராக மாறினால், இழப்பீடு ரூ. 20 லட்சத்திற்கு குறையாமல் இருக்கும். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் 20.10.2023 நாளிட்ட ஆணையின்படி, உயிரிழந்தவர்களின் 22 குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துதல் தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி, 06.12.2013 முதல் கையால் கழிவுகளை அகற்றும் பணி நாட்டில் தடை செய்யப்பட்ட தொழிலாக உள்ளது.
மேற்கண்ட தேதியிலிருந்து எந்த ஒரு நபரோ அல்லது முகமையோ கையால் கழிவுகளை அகற்றும் பணியில் எந்த ஒரு நபரையும் பணியமர்த்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. எம்.எஸ். சட்டம், 2013-ன் விதிமுறைகளை மீறி எந்தவொரு நபரையும் அல்லது முகமையையும் கையால் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தினால், அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் கையால் கழிவுகளை அகற்றுவோர் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் குறித்த விவரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றைப் பதிவு செய்ய ஒரு கைபேசி செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மனித கழிவை மனிதர்களே அகற்றுகையில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. 766 மாவட்டங்களில், 249 மாவட்டங்கள் கையால் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு, இதற்கான சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன" என தெரிவித்துள்ளார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















