Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
உள் பாவாடை கிடையாதா? சிவி சண்முகத்தை அடுத்து திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா என்று கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
திமுக ஆட்சியின்கீழ் சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வழக்குகள், போதைப் பொருள் பிரச்சினைகள் குறித்து அதிமுகவினர் இன்று (மார்ச் 17) மாநிலம் முழுவதும் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.
சி.வி.சண்முகம் சர்ச்சைப் பேச்சு
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கிடையே விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
அவர் கூறும்போது, ’’அப்துல் கலாம் கனவு காணுங்கள் என கூறினார். ஆனால் முதல்வர் ஒரு படி மேலே சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறோம் என கூறுகிறார். "நயன்தாரா" வேண்டும் என்றால் முதல்வர் நிறைவேற்றுவாரா? "நயன்தாராவை" திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்பார்கள் முதல்வர் நிறைவேற்றுவாரா.? என்று கேட்டது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையே தவறுதலாக நயன்தாராவின் பெயர் உச்சரிக்கப்பட்டதாகவும் அதில் எந்த உள் நோக்கமும் இல்லை எனவும் சி.வி. சண்முகம் தெரித்துள்ளார்.
சீனுக்கு வந்த திண்டுக்கல் சீனிவாசன்
சி.வி. சண்முகம் சர்ச்சை ஓய்வதற்குள் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது.
மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ’’பணத்தை வைத்து திமுக மக்களை வீழ்த்துகிறது. ஏற்கெனவே 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பிறகு ஹாட் பாக்ஸ் கொடுத்தார்கள். பின்பு சேலை கொடுத்தார்கள்.
பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது?
பெண்கள் எல்லோரும், ’’பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது?’’ என்று கேட்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். பணத்தை வைத்து வீழ்த்திவிட நினைக்கிறார்கள் என்று பேசி இருந்தார்.
இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்து நடைபெற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்களே பெண்களுக்கு எதிராகப் பேசுவதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
''பாக்கெட்டில் பெண் கட்சி தலைவி புகைப்படம் இருக்கும், ஆனால் பேசும் பேச்செல்லாம் வக்கிரம்'' என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.





















