சபரிமலை சீசன்: பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மசூலிப்பட்டினம் முதல் கொல்லம் வரை நேரடி சேவை!
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
கொல்லத்துக்கு போத்தனூர் வழியாக சிறப்பு ரயில்
சபரிமலை சீசனையொட்டி ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டிணத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சபரிமலை சீசனையொட்டி வருகிற 14, 21, 28 மற்றும் அடுத்த மாதம் (டிசம்பர்) 26, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 2 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மசூலிப்பட்டிணத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் மசூலிப்பட்டிணம்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 07101) மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் ரயில்நிலையத்தை சென்றடையும்.
மறுமார்க்கம் ரயில் சேவை
மறுமார்க்கத்தில் வருகிற 16, 23, 30 மற்றும் டிசம்பர் 28, ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் கொல்லம்-மசூலிப்பட்டிணம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07102) மறுநாள் காலை 8 மணிக்கு மசூலிப்பட்டிணம் ரயில்நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது காயன்குளம், செங்கணூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறியுள்ளது.
நரசப்பூர் டூ கொல்லம் ரயில்
மேலும் சபரிமலை பக்தர்களுக்காக தென் மத்திய ரயில்வே சபரிமலை சீசனை முன்னிட்டு, நரசப்பூர் (Narasapur) மற்றும் கொல்லம் (Kollam) இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் தமிழகத்தில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகின்றன.

சார்லபள்ளி டூ கொல்லம் சிறப்பு ரயில்
இதேபோல் சபரிமலை பக்தர்களின் பயண நெரிசலைக் குறைக்க, சார்லபள்ளி (Charlapalli) மற்றும் கொல்லம் (Kollam) இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில்கள் தமிழகத்தில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகின்றன. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் வகையில், காக்கிநாடா டவுன் (Kakinada Town) மற்றும் கோட்டயம் (Kottayam) இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது.
ஹுஸூர் சாஹிப் நாந்தேட் (Hazur Sahib Nanded) மற்றும் கொல்லம் (Kollam) இடையே சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளது. இந்த ரயில் திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, செங்கோட்டை வழியாகச் செல்வதால் தமிழகத்தின் பல பகுதிப் பயணிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.




















