![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rakesh Asthana | டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
’’வரும் 31-ஆம் தேதி ஓய்வு பெற உள்ள ராக்கேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் ஆணையராக நியமித்துள்ளதன் மூலம் மோடி, அமித்ஷா ஆகியோர் ஊழலுக்கு துணை போறவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்’’
![Rakesh Asthana | டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் Rakesh Asthana appointed as Delhi Police Commissioner, KS Alagiri condemns Modi, Amit Shah for appointing Rakesh Asthana | டெல்லி காவல் ஆணையராக ராகேஷ் அஸ்தனா நியமிக்கப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/29/5bbb9ef177c111742fc218ed65dd2959_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2019 ம் ஆண்டின் தொடக்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனா மீது, அப்போதைய சி.பி.ஐ. இயக்குநராக இருந்த அலோக் குமார் வர்மா நடவடிக்கை எடுத்துவிடாமல் தடுக்க பல வழிகளை மோடி அரசு கையாண்டதை நாடு அறியும். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் அலோக் வர்மாவையும் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய நாடகம் அரங்கேறியது. ரபேல் ஒப்பந்தம் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால் தான் அலோக் வர்மா மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, மோடி அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அலோக் வர்மாவுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளும் இந்த குற்றச்சாட்டை உறுதி செய்வதாகவே அமைந்தன.
அதன்பின்னர், மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசின் நடவடிக்கை செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மீண்டும் சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் அலோக் வர்மா அமர்ந்தார். அதன்பிறகு அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் கூட்டம் நடந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு எதையும் விசாரிக்காமல், சி.பி.ஐ. இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மாவை நீக்கி ஜனநாயகப் படுகொலையை மோடி அரங்கேற்றினார். அதேசமயம், கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தனாவுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பதவியை மோடி அரசு வழங்கியது.
2018-ஆம் ஆண்டு மொயின் குரேஷி ஊழல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சனா சதீஷ், இடைத்தரகர்கள் மூலம் ராகேஷ் அஸ்தனாவுக்கு ரூ. 2.95 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குஜராத்தின் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் ராகேஷ் அஸ்தனா லஞ்சம் பெற்றதாக அந்த நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட டைரியிலிருந்து தெரியவந்தது. இதுபோல ராகேஷ் அஸ்தனா மீது அடுக்கடுக்கான பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
1984 ஆம் ஆண்டு குஜராத்தில் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஸ்தனா, 2002 ஆம் ஆண்டு கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் தீ விபத்து போன்ற சில முக்கிய வழக்குகளை விசாரித்தவர். தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக ராகேஷ் அஸ்தனாவுக்கு பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர். உச்சக்கட்ட நிகழ்வாக, வரும் 31-ஆம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்த ராகேஷ் அஸ்தனாவை, டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நியமித்துள்ளது. இதன்மூலம் தாங்கள் ஊழலுக்கு மட்டுமே துணை போகிறவர்கள் என்பதைப் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவருக்கு, தொடர்ந்து பதவி கொடுத்துக் காப்பாற்றிவரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் சாயம் இதன்மூலம் மீண்டும் வெளுத்திருக்கிறது. நேர்மையான அதிகாரியான அலோக் வர்மாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அரவணைப்பதன் மூலம் பதவியில் தொடரும் தார்மீக உரிமையைப் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இழந்து விட்டார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)