Rahul Gandhi: சியுஇடி தேர்விலும் குளறுபடி: "ஒரு தேர்வு கூட ஒழுங்கா நடத்தல" மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!
நாடெங்கும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 2026-ஆம் ஆண்டிற்கான சிஇயுஇடி-யுஜி (CUET-UG) நுழைவுத்தேர்வு தாமதமாகத் தொடங்கியதால் பெரும் பரபரப்பும ஏற்பட்டது.

நீங்கள் உலகத் தலைவர் (விஸ்வகுரு) என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள், ஆனால் உங்களால் நாட்டில் ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்று பிரதமர் மோடியை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சியுஇடி-யுஜி 2026 தேர்வில் பரபரப்பு
நாடெங்கும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 2026-ஆம் ஆண்டிற்கான சிஇயுஇடி-யுஜி (CUET-UG) நுழைவுத்தேர்வு தாமதமாகத் தொடங்கியதால் பெரும் பரபரப்பும ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டதாகவும், பின்னர் தேர்வு சற்றுத் தாமதமாகத் தொடங்கியதாகவும் தேசிய தேர்வு முகமை (NTA) விளக்கம் அளித்துள்ளது. இந்த விவகாரம் தற்போது நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் விவாதமாக உருவெடுத்துள்ளது.
மத்திய அரசைச் சாடிய ராகுல் காந்தி
இது குறித்து மத்திய அரசை கடுமையாகச் சாடியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE), எஸ்எஸ்சி (SSC), இப்போது சியுஇடி (CUET) என நான்கு தேர்வுகள், ஒரு கோடி மாணவர்கள், ஆனால் ஒரு தேர்வு கூட இங்கு நேர்மையாக நடத்தப்படவில்லை என்று எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நீங்கள் உலகத் தலைவர் (விஸ்வகுரு) என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள், ஆனால் உங்களால் நாட்டில் ஒரு தேர்வைக்கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை என்றும், மோடி ஒட்டுமொத்த கல்வி முறையையும் சீரழித்துவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எந்தத் தலைமுறையின் எதிர்காலத்தை நீங்கள் பாழாக்குகிறீர்களோ, அதே தலைமுறை உங்களிடம் இதற்கான கணக்கைக் கேட்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறும் தேர்வு முறையும்
இந்த சியுஇடி-யுஜி 2026 தேர்வின் போது, பல்வேறு தேர்வு மையங்களில் திடீரென தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும், இந்தத் தொழில்நுட்பப் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும், மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்வு எழுத முழுமையான அவகாசம் வழங்கப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அண்மையில் நீட், சிபிஎஸ்இ மற்றும் எஸ்எஸ்சி தேர்வுகள் தொடர்பாக எழுந்த பல்வேறு சர்ச்சைகளைத் தொடர்ந்து, தற்போது சிஇயுஇடி தேர்விலும் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் தேர்வு முறை மீதான விவாதத்தை மீண்டும் உக்கிரமாக்கியுள்ளது.
தேசிய தேர்வு முகமையின் விளக்கம் மற்றும் உதவி எண்கள்
இவ்விவகாரத்தில் மத்திய அரசும் கல்வி அமைச்சகமும் உரிய பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்வுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காலையில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் போதுமான நேரம் வழங்கப்பட்டதாகவும், யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ள என்டிஏ, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட்ட சிரமத்திற்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
மாணவர்களின் உதவிக்காக 91-11-40759000 என்ற உதவி எண்ணையும், cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் என்டிஏ வெளியிட்டுள்ளது. அதிக அளவிலான மாணவர்கள் பங்கேற்பதாலும், பல்வேறு பாடப்பிரிவுகளின் சேர்க்கைக்கான விரிவான அட்டவணை இருப்பதாலும், இந்த சிஇயுஇடி-யுஜி தேர்வு பல நாட்களாக பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான சிஇயுஇடி-யுஜி 2026 தேர்வுகள் கடந்த மே 11 அன்று தொடங்கி, மே 31 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















