"மனித குலத்தின் நலனே.. இந்தியாவின் தத்துவம்" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகத்தின் வெற்றி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவை பெரிய சாதனை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் வர்த்தகச் சூழல் வர்த்தக வல்லுநர்களையும் முதலீட்டாளர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் செயல்பாடு, மாற்றம் மற்றும் சீர்திருத்தம் ஆகிய தாரக மந்திரத்துடன் இந்தியா கண்டுள்ள முன்னேற்றம் ஒவ்வொரு துறையிலும் காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் 11ஆவது பெரிய பொருளாதார நாடாக மட்டுமே இந்தியாவால் உயர முடிந்துள்ளது என்று மோடி எடுத்துரைத்தார். ஆனால், கடந்த பத்தாண்டுகளில், இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் தத்துவம் இதுதான்!
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது என்றும் மோடி கூறினார். 2014-க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த பத்தாண்டுகளில் அந்நிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
"ஜனநாயகம், மக்கள்தொகை, டிஜிட்டல் தரவு, விநியோகம் ஆகியவற்றின் உண்மையான சக்தியை இந்தியாவின் வெற்றி வெளிப்படுத்துகிறது" என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஜனநாயகத்தின் வெற்றி மற்றும் அதிகாரமளித்தல் ஒரு பெரிய சாதனை என்று அவர் கூறினார்.
ஜனநாயக நாடாக இருந்துகொண்டே மனித குலத்தின் நலனே இந்தியாவின் தத்துவத்தின் மையமாக உள்ளது என்றும் அதுதான் இந்தியாவின் அடிப்படைத் தன்மை என்றும் அவர் கூறினார். இந்திய மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தியதற்காகவும், இந்தியாவில் ஒரு நிலையான அரசை உறுதி செய்ததற்காகவும் அவர் பாராட்டினார்.
பிரதமர் மோடி பேசியது என்ன?
இந்தியாவின் இந்தப் பண்டைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இளைஞர் சக்தியாக விளங்கும் மக்கள் தொகையை மோடி பாராட்டினார். வரவிருக்கும் ஆண்டுகளில் உலகின் இளைய நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றும், இந்தியா மிகப்பெரும் எண்ணிக்கையிலாஇளைஞர்களையும், ஆகப்பெரும் திறன் கொண்ட இளைஞர் குழுவையும் கொண்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திசையில் அரசு பல சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் இளைஞர் சக்தி நமது வலிமைக்கு மற்றொரு பரிமாணத்தை சேர்த்துள்ளது என்றும், இந்தப் புதிய பரிமாணம் இந்தியாவின் தொழில்நுட்ப சக்தி மற்றும் தரவு சக்தி என்றும் மோடி குறிப்பிட்டார்.
இன்றைய உலகில் ஒவ்வொரு துறையிலும் தொழில்நுட்பம் மற்றும் தரவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மோடி, "இந்த நூற்றாண்டு தொழில்நுட்பம் மற்றும் தரவு ஆகியவற்றின் உந்துதலைக் கொண்டுள்ளது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

