![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல்.. முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் 8 பேர்கொண்ட குழு.. என்ன செய்யப்போகிறது?
மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும்.
![One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல்.. முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் 8 பேர்கொண்ட குழு.. என்ன செய்யப்போகிறது? One nation one election committee objectives and terms of reference know more details here One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல்.. முன்னாள் குடியரசு தலைவர் தலைமையில் 8 பேர்கொண்ட குழு.. என்ன செய்யப்போகிறது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/d473d975a35c877bfa32620300e64a651693672411342729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடப்பு மக்களவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதனால், அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில், தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தான். நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பான, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
8 பேர் கொண்ட குழு:
இந்த நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிந்துரைகளை வழங்க குழு அமைத்து மத்திய அரசு இன்று அறிவிப்பானை வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, மத்திய ஊல் தடுப்பு அமைப்பின் முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி, நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என். கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் பணி, நோக்கங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் தற்போதுள்ள விதிகளை கருத்தில் கொண்டு, மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் வேறு ஏதேனும் சட்டம் ஆகியவற்றில் குறிப்பிட்ட திருத்தங்களை மேற்கொள்வது அவசியம். எனவே, மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை ஆராய்ந்து குழு பரிந்துரை வழங்கும்.
தொங்கு நாடாளுமன்றம், தொங்கு சட்டப்பேரவை, நம்பிக்கையில்லா தீர்மானம் அல்லது கட்சி தாவல் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து இக்குழு ஆய்வு செய்து சாத்தியமான தீர்வுகளை பரிந்துரைக்கும். எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழு, தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவைப்படும் உள்கட்டமைப்பையும், எந்த காலக்கட்டத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும், எவ்வளவு விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்கள் தேவைப்படும் போன்றவை உட்பட தேவையான கருவிகள் மற்றும் மனிதவளத்தை இந்த குழு ஆய்வு செய்யும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கு அரசியலமைப்பு சாசனத்தில் திருத்தம் தேவை. அதுமட்டும் இன்றி, 28 மாநிலங்களில் 14 மாநில சட்டப்பேரவைகள் (50 சதவிகித சட்டப்பேரவை), அரசியலமைப்பு சாசனத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். இந்த ஒப்புதல் தேவையா என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும். மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என குழு பரிந்துரைக்கும் பட்சத்தில் சிறப்பு பெரும்பான்மையின் கீழ் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)