தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தெலங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக தெருநாய்கள் கொலை செய்யப்பட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்டன.

தெலங்கானா மாநிலத்தில் 100 நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் தெரு நாய்கள் மட்டுமல்லாமல் வெளியில் அழைத்துச் செல்லப்படும் வீட்டு வளர்ப்பு நாய்களாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான காயம் தொடங்கி உயிரிழப்பு வரை நேர்வதால் இந்த விஷயத்தில் கடும் உத்தரவுகளை உச்சநீதிமன்றமே பிறப்பித்தது. தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவும் உத்தரவிட்டது. ஆனால் விலங்குகள் நல அமைப்புகளின் எதிர்ப்பால் இந்த உத்தரவை செயல்படுத்துவதில் மாநில அரசுகள் சுணக்கம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் தொடர்ச்சியாக தெருநாய்கள் கொலை செய்யப்பட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்தாண்டு ஜனவரியில் தெலங்கானாவின் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் பெருமளவில் கொல்லப்பட்ட சம்பவங்கள் பதிவாகின. இந்த நிலையில் தற்போது 100 நாய்கள் மீண்டும் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த 4 மாதங்களில் சுமார் 1300 நாய்கள் கொலை செய்யப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தெருநாய் தொல்லையை தீர்க்க மக்களுக்கு வாக்குறுதி அளித்த நிலையில் தெரு நாய்களை கொலை செய்தனர். இந்த நிலையில் மார்ச் 7 மற்றும் 8 தேதிகளின் இடைப்பட்ட இரவில் அங்குள்ள கிஷ்டபூர் கிராமத்தில் சுமார் 100 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் கௌதம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா என்ற விலங்கு நல அமைப்பில் பணியாற்றும் அவர், கிஷ்டாபூர் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் இரண்டு நபர்களை வேலைக்கு அமர்த்தி தெருநாய்களைக் கொன்று அதனை விஷ ஊசி போட்டு ஆற்றின் அருகே புதைத்ததாகக் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து ஜன்னாரம் காவல்துறையினர் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பட்டினி போட்டு கொல்வதும், உணவில் விஷம் வைப்பதும் ஆங்காங்கே பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் அரசு தரப்பில் ரேபீஸ் தடுப்பூசி, கருத்தடை ஆபரேஷன் போன்றவை நாய்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. பகல் நேரங்களில் கூட நிம்மதியாக வீட்டில் நடமாட முடியவில்லை என பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.























