Lockdown: மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கா? - மத்திய அமைச்சர் பரபரப்பு விளக்கம்!
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

மேற்காசிய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பெரும்பான்மையான மாதங்கள் கொரோனா நோய்தொற்று காரணமாக முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு பொருளாதாரமும் அடியோடு சரிந்தது. இதனால் ஊரடங்கு என்ற வார்த்தையை கேட்டாலே நம்மை அறியாமல் அச்சம் தொற்றிக் கொள்கிறது. அப்படியான நெருக்கடியில் இருந்து மக்கள் 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முழுமையாக மீளவில்லை.
இப்படியான நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் பதற்றம் காரணமாக உலக நாடுகளில் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்தியாவில் நிலவுவதை மத்திய அரசு உறுதி செய்த நிலையில் அதனை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் கிடைக்காது என்ற தகவலும் காட்டு தீயாய் பரவ பெட்ரோல் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
இப்படி படிப்படியாக போரால் இந்தியாவில் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அடுத்ததாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என்றும், எரிபொருள் கிடைக்காது எனவும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
The global situation remains in flux, and we are closely monitoring developments across energy, supply chains, and essential commodities on a real-time basis.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) March 27, 2026
Under the leadership of Hon’ble PM @narendramodi Ji, all necessary steps are being taken to ensure uninterrupted…
இந்த நிலையில் இன்று மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை மேற்காசிய போர் தீவிரமடைந்தால் நிலைமையை கையாள என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், இந்திய அரசாங்கத்தால் அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. இதுபோன்ற காலங்களில், நாம் அமைதியாகவும், பொறுப்புடனும், ஒற்றுமையுடனும் இருப்பது முக்கியம். எரிசக்தி மற்றும் எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றித் தொடர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதால், இந்தியாவின் எரிசக்தி நிலைமை பாதுகாப்பாக உள்ளது. உருவாகும் சவால்களைச் சமாளிக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.























