நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்ட பெண் சடலம்.. விட்டு ஓடுவதா? என்ன மாதிரியான தோழி அவர்? மகளிர் ஆணையத் தலைவர் ஆவேசம்..
விபத்து நடந்த பிறகும், வாகனத்தின் அடியில் சிக்கி கொண்ட அந்த பெண் 12 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

டெல்லியில் இளம்பெண் ஒருவரின் ஸ்கூட்டி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. விபத்து நடந்த பிறகும், வாகனத்தின் அடியில் சிக்கி கொண்ட அந்த பெண் 12 கிலோமீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.
மாருதி சுசுகி பலேனோ காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கிரெடிட் கார்டு சேகரிப்பு முகவர், ஓட்டுநர் மற்றும் ரேஷன் கடை உரிமையாளர் ஆகியோர் அடங்குவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி சுல்தான்புரியில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கிய சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி (20) உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, கார் 10-12 கிமீ தூரம் சென்றது, காரின் அடிப்பகுதியில் அவரது கைகால்கள் சிக்கிக்கொண்டன என்று போலீசார் தெரிவித்தனர்.
அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என கூறினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.
பெண்ணின் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ” பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் எந்த காயமும் இல்லை. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை" எனவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
அவரது தலை, முதுகுத்தண்டு, இடது தொடை எலும்பு மற்றும் கீழ் முட்டுகளில் ஏற்பட்ட காயங்கள் மற்றும் ரத்தக் கசிவு காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது தோழியும் அவர்களது நண்பர்களுடன் பார்ட்டியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை வைத்து சிலர் பாதிக்கப்பட்ட பெண்ணை கடுமையாக விமர்சித்தனர்.
இதை கடுமையாக சாடியுள்ள டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால், பாதிக்கப்பட்டவர்கள் மீது குறை கூறுவதை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "தொலைக்காட்சியில் காலையில் இருந்து ஹோட்டல் உரிமையாளரின் இழிவான கருத்துகள் காட்டப்படுகின்றன. அந்த பெண்கள் மது அருந்திவிட்டு சண்டையிட்டுக் கொண்டதாகவும் எனவே அவர்களை ஹோட்டலில் இருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
குடிபோதையில் பெண்கள் சண்டையிட்டிருந்தால் போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஏன் இரவில் தாமதமாக ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்? அவர்கள் போதையில் இருந்ததற்கான ஆதாரம் எங்கே? பாதிக்கப்பட்டவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.




















