EC Slams Rahul: “பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன“ - ராகுலை சாடிய தேர்தல் ஆணையம்
பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தி பொய்கள் பரப்பப்படுவதாகவும், தனது குற்றச்சாட்டின் மூலம் இந்திய அரசியலமைப்பை ராகுல் அவமதிப்பதாகவும் தேர்தல் ஆணையம் விமர்சித்துள்ளது.

பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக சாடிய ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெறுவதாகவும், வாக்குத் திருட்டு நடைபெறுவதாகவும் சரமாரியாக குற்றம்சாட்டினார். இந்நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்தார், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். அப்போது, தனது குற்றச்சாட்டின் மூலம் இந்திய அரசியலமைப்பை ராகுல் காந்தி அவமதிப்பதாக தெரிவித்தார்.
“தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது“
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் பட்டியலில் சீராய்வு தேவை என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன, தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது எனவும், எங்கள் கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறமாட்டோம் என்றும் கூறினார்.
எல்லா கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சரிசமமாக நடத்துவதாக கூறிய அவர், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலம் உருவாகின்றன எனவும், பிறகு எப்படி அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன“
தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர், பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுவதாக ராகுலை மறைமுகமாக சாடினார். வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் அரசியலமைப்பை அவமதிக்கின்றன என்று கூறிய அவர், ஒட்டுமொத்த தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதிதான் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) என்று தெரிவித்தார்.
பீகாரில் இந்நடவடிக்கையில் அனைத்து கட்சிகளின் பங்கும் உள்ளதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் போலியான, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாக கூறினார். அனைத்து மாவட்ட அளவிலும், அனைவரும் இணைந்து செயல்படுவதாகவும், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வெளிப்படையான முறையில் பணியாற்றுவதாகவும் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
சிலர் இரட்டை வாக்களிப்பு நடந்ததாக கூறினர். ஆனால், ஆதாரம் கேட்டபோது எந்த பதிலும் இல்லை என கூறிய அவர், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஒன்றும் புதிதல்ல, இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது என கூறினார். யார் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசமைப்பு கடமையிலிருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்காது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் எவ்வித பாகுபாடுமின்றி தேர்தல் ஆணையம் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
“வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்“
இவ்வளவு மக்கள் முன்னிலையில் வாக்காளர்களின் வாக்குகளை எப்படி திருட முடியும் என கேள்வி எழுப்பிய ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை என்றும், தேர்தல் ஆணையத்திற்கு எதிர்க்கட்சி, ஆளும் கட்சி என்ற வேறுபாடு எதுவும் கிடையாது, அனைரும் சமம் என கூறினார்.
எதிர்க்கட்சிகளின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், சில கட்சிகள் குழப்பத்தை உருவாக்கி வரவதாகவும், எதிர்க்கட்சிகள் தங்கள் புகாரை தெளிவாக வரையறுத்து கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.





















