![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chief Justice Chandrachud : "அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமா இருக்கனும்" இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்!
வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கியுள்ளார்.
![Chief Justice Chandrachud : Chief Justice DY Chandrachud to Judges Ahead Of Lok Sabha elections says Loyalty Should Be With Constitution Chief Justice Chandrachud :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/1aa9142ed1964e81cb4640f388da4de81712420688534729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சண்டிகர் மேயர் தேர்தல் தொடங்கி தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை வரை பல அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர் இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட். இவர், தலைமை நீதிபதியாக பதவியேற்றபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சட்டப் பிரிவு 370, தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கு உள்ளிட்டவற்றில் சந்திரசூட் வழங்கிய தீர்ப்பு பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை:
ஆனால், சமீப காலமாக, அவர் வழங்கி வரும் தீர்ப்புகள் பெரும் வரவேற்பை பெறும் வகையில் உள்ளது. இந்த நிலையில், வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் அரசியலமைப்புக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கியுள்ளார்.
நாக்பூர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், "நம்மைப் போன்ற துடிப்பான விவாதத்திற்குரிய ஜனநாயகத்தில், பெரும்பாலான தனிநபர்களுக்கு அரசியல் சித்தாந்தம் உள்ளது. அல்லது அதன் மீது விருப்பம் உள்ளது.
மனிதர்களை அரிஸ்டாட்டில் அரசியல் விலங்குகள் என குறிப்பிடுகிறார். அதற்கு வழக்கறிஞர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இருப்பினும், வழக்கறிஞர்களுக்கு அதிகபட்ச விசுவாசம் கட்சிகள் மீது இருக்கக் கூடாது. அதன் நலன்கள் சார்ந்து இருக்கக்கூடாது. மாறாக நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பின் மீது இருக்க வேண்டும்.
"சுதந்திரத்தை நிலைநிறுத்திய நீதித்துறை"
நீதித்துறையானது தனது சுதந்திரம் மற்றும் பாரபட்சமற்ற தன்மையை பல சந்தர்ப்பங்களில் நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், அரசியல் நலன்களுக்கான அதிகாரங்கள் தனித் தனியே இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திரமான வழக்கறிஞர் சமூகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்கான தார்மீக அரணாக செயல்படுகிறது.
கடுமையான செயல்பாடுகள், முழுமையான சட்டப் பகுப்பாய்வு, அரசியலமைப்பு கோட்பாடுகளுக்கு அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உச்சத்தையே உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
தீர்ப்பு வந்தவுடன் அது பொதுச் சொத்தாகிவிடும். ஒரு நிறுவனமாக, எங்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது. பத்திரிகை கட்டுரைகள் மூலமாகவோ, அரசியல் விமர்சனங்கள் வாயிலாகவோ அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ பாராட்டுக்களும் விமர்சனங்களும் வரும். பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்களைப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஷ்ரா உள்பட 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சேர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமீபத்தில் கடிதம் எழுதினர். அதில், நீதித்துறையின் நேர்மைக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக கவலை தெரிவித்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)