Bihar Election 2025 Result: பீகாரின் தலையெழுத்து என்ன.?; நிதிஷே நெக்ஸ்டா அல்லது ட்விஸ்டா.? - நாளை எண்ணப்படும் வாக்குகள்
Bihar Election 2025 Result Date: பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை(14.11.25) எண்ணப்படும் நிலையில், முடிவை எதிர்பார்த்து இந்தியாவே காத்திருக்கிறது. நிதிஷ் தொடர்வாரா அல்லது ஆட்சி மாறுமா.?

பீகார் சட்டசபை தேர்தல், நவம்பர் 6 மற்றும் 11-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அம்மாநில வரலாற்றில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதனால், ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற கருத்துகள் இருந்தாலும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், நிதிஷின் ஆட்சியே தொடரும் என்று கூறுகின்றன. இதனால், பீகார் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதுமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. நாளை வாகை சூடப் போவது யார்.? அலசுவோம்.
பீகாரில் சாதனை அளவில் பதிவான வாக்குகள்
பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில், இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக கடந்த 6-ம் தேதி 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்று பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவானது.
இதைத் தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி மீதமுள்ள 122 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில், முதல் கட்டத்தையும் மிஞ்சி 68.76 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து சராசரியாக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாளை எண்ணப்படும் வாக்குகள்
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதால், இந்திய அரசியல் களமே பரபரப்பில் உள்ளது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதற்காக, மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
மேலும், ஒவ்வொரு மையத்திலும் CCTV கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் (EVM) தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபையில், ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. வாக்கு எண்ணிக்கையில் முன்னணி நிலவரங்களின் போக்கை வைத்து, பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது நாளை பிற்பகலில் தெரிந்துவிடும். மாலைக்குள் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் வரலாறு கூறுவது என்ன.?
பீகார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிக 66.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடும் போது, அதைவிட 9.62 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன. இதனால், பாஜக கூட்டணி ஆட்சியை இழக்கும் என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணப்புகளில், பெரும்பாலும் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, பீகார் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், 5 சதவீத அளவில் வாக்குப்பதிவு அதிகரிக்கும் போதெல்லாம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவருகிறது.
இதற்கு முன்னதாக, 1962 தேர்தலைவிட 1967-ல் நடந்த தேர்தலில் 7 சதவீதம் வாக்குப்பதிவு உயர்ந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. அப்போது, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளனர்.
1977 தேர்தலைவிட, 1980 தேர்தலில், வாக்குப்பதிவில் 6.8 சதவீதம் அதிகம் பதிவான நிலையில், ஜனதா தளம் ஆட்சியை இழந்தது. அதேபோல், 1985 தேர்தலை விட, 1990 தேர்தலில் 5.8 சதவீத வாக்குப்பதிவு அதிகரித்தபோது, காங்கிரஸ் ஆட்சியை இழந்து, லாலு பிரசாத் யாதவ்வின் ஜனதா தளம் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.
மீண்டும் நிதிஷ் குமாரா அல்லது தேஜஸ்வியா.?
இப்படிப்பட்ட சூழலில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில், 9 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனால், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதையே வரலாறு சொல்கிறது. ஒட்டுமொத்தமாக அனைத்து மாநில தேர்தல்களையும் ஒப்பிடும்போது, பெரும்பாலும், அதிகப்படியான வாக்குகள் பதிவாகும்போது, ஆட்சி மாற்றம் ஏற்படும் என்தே வரலாறாக உள்ளது.
ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணப்புகளில் பெரும்பாலானவை பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளது. இதனால் சற்று குழப்பமான நிலையே ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில், கருத்துக் கணிப்பின் படி, பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.(யு)-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது கணிப்புகளை பொய்யாக்கி தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சியை அதிரடியாக கைப்பற்றி, 20 ஆண்டு கால நிதிஷின் ஆட்சிக்கு முடிவு கட்டுமா என்பதே தற்போது இந்திய அளவில் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















