"பிள்ளை பிறக்கனும்" நரபலியால் நடுங்கிய கிராமம்.. முதியவரின் தலையை வெட்டிய மாந்திரிகவாதி
மாந்திரீகத்தின் ஒரு பகுதியாக முதியவரின் தலை வெட்டப்பட்டு அவரது முண்டம் நெருப்பில் கொளுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறக்க வேண்டி, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

பீகாரில் 65 வயது முதியவர் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகத்தின் ஒரு பகுதியாக முதியவரின் தலை வெட்டப்பட்டு அவரது முண்டம் கொளுத்தப்பட்டுள்ளது. பிள்ளை வரம் வேண்டி, இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.
நரபலியால் நடுங்கிய கிராமம்:
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் யுகல் யாதவ். இவருக்கு வயது 65. 'ஹோலிகா தகனம்' என்ற திருவிழாவின்போது, யுகுல் யாதவின் தலை வெட்டப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார். இவரது முண்டம் நெருப்பில் எரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவுரங்காபாத் காவல் கண்காணிப்பாளர் (SP) அம்பரீஷ் ராகுல் கூறுகையில், "கடந்த மார்ச் 13 ஆம் தேதி, மதன்பூர் காவல் நிலையத்திற்கு குலாப் பிகா கிராமத்தைச் சேர்ந்த யுகல் யாதவ் காணாமல் போனதாக புகார் வந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் போது, பக்கத்து கிராமமான பங்கரில் ஹோலிகா தகனம் திருவிழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதைபதைக்கும் சம்பவம்:
அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது, அங்கிருந்து எரிந்த மனித எலும்புகள் மற்றும் யுகலின் செருப்புகள் கண்டெடுக்கப்பட்டன. உடனடியாக நாய் படை வரவழைக்கப்பட்டது. அந்த நாய்கள், விசாரணை அதிகாரிகளை ராமஷிஷ் ரிக்யாசன் என்ற மாந்திரீகவாதியின் வீட்டுக்கு அழைத்து சென்றது.
ராமஷிஷ் வீட்டில் இல்லாத நிலையில், அவரது உறவினர் தர்மேந்திராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்ததால் அவர் காவலில் எடுக்கப்பட்டார். தர்மேந்திராவும் மற்றவர்களும் மாந்திரீகத்தின் ஒரு பகுதியாக யுகலை கடத்தி தலை துண்டித்ததாக ஒப்புக்கொண்டனர்.
பின்னர், அவரது உடல் ஹோலிகா தகன நெருப்பில் எரிக்கப்பட்டது. தர்மேந்திராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அருகிலுள்ள வயலில் இருந்து யுகலின் துண்டிக்கப்பட்ட தலையை போலீசார் மீட்டனர்.
குழந்தை வரம் வேண்டி சுதிர் பாஸ்வானின் சார்பாக ராமஷிஷ் இந்த சடங்கை நடத்தினார். தர்மேந்திராவும் இந்தக் குழுவும் முன்பு ஒரு டீனேஜரை பலியிட்டதாகவும், அவரது உடல் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டார்கள். சுதிர் பாஸ்வான், தர்மேந்திரா மற்றும் இருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
Before You Go
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
ட்ரெண்டிங் செய்திகள்






















