சபரிமலை ஐயப்பன் கோயில்: தங்க கவசம் திருட்டு வழக்கில் பரபரப்பு! முன்னாள் ஆணையரிடம் விசாரணை தீவிரம்,
தங்க கவச வழக்கில் கோயிலின் முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜுவிடம் விசாரணை நடத்த கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சபரிமலை உள்ள ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றக் கோயில். இந்த கோயிலின் ஐயப்பன் சன்னதிக்கு முன்பு துவாரபாலகர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு மேல் சுமார் 42 கிலோ எடை உடைய தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.
இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவாரபாலகர் சிலையில் பொருத்தப்பட்டிருந்த தங்க தகடுகள் மீது தங்க முலாம் பூசுவதற்காக சபரிமலை நன்கொடையாளராக இருந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் மூலம் சென்னையில் உள்ள SMAR CREATION நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது திருவிதாங்கூர் தேவசம் போர்டு. பணிகள் முடிந்து மீண்டும் சபரிமலைக்கு கொண்டு வரப்பட்டபோது 38 கிலோ தங்கம் குறைந்து துவார பாலகர் சிலை தங்க தகடுகள் 4.52 கிலோ மட்டுமே இருந்துள்ளது.
இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இந்த விசாரணையின் அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த நிலையில், தங்கம் மாயமானது குறித்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, SID அதிகாரிகள் உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சபரிமலை கருவறையின் இருபுறமும் உள்ள துவாரபாலகன் சிலைகள் தங்க முலாம் பூசப்படவில்லை.
அவை செப்பு தகடுகள். ஆனால்,சபரிமலை கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகன் சிலைகள் பீடங்கள் தங்கமுலாம் பூசப்பட்டவை என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து தங்க தகடுகள் பதிக்கப்பட்டவை என்பதை உறுதி செய்யும் ஆவணங்களை திருவதாங்கூர் தேவசம் போர்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதனை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன், முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், சபரிமலை தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் என்பவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தங்க கவச வழக்கில் கோயிலின் முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜுவிடம் நேற்று மாலை வரை விசாரணை நடத்த கொல்லம் விஜிலென்ஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் பைஜுவிடம் எஸ்ஐடி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். தங்க கவசங்களை எடுத்துச் செல்ல உன்னி கிருஷ்ணனை அனுமதித்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறை குறித்து பைஜுவிடம் மீண்டும் விசாரித்ததாக போலீசார் கூறினர். இதற்கிடையில் கதவு நிலைகளில் இருந்து தங்கம் திருடுபோன இரண்டாவது வழக்கில் பைஜுவின் ஜாமீன் மனுவை விஜிலென்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.





















