![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Delhi Service Bill: அதிகாரத்தை இழக்கிறார் கெஜ்ரிவால்..! டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்..
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டது.
![Delhi Service Bill: அதிகாரத்தை இழக்கிறார் கெஜ்ரிவால்..! டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்.. after loksabha delhi services bill passed in rajya sabha too kejriwal looses power Delhi Service Bill: அதிகாரத்தை இழக்கிறார் கெஜ்ரிவால்..! டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/e5ce2cdd577ddc8f5a5637c7eb90a6c11690959806547645_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, விரைவில் இந்த மசோதா சட்டமாக அமலபடுத்தப்பட உள்ளது.
டெல்லி நிர்வாக மசோதா:
தலைநகர் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு உருவாக்கியது. இது, டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக்கவும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வழி வகை செய்கிறது.
மக்களவையில் நிறைவேற்றம்:
இந்த மசோதா கடந்த 3ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிப்புகளுக்கு மத்தியிலும், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன.
மாநிலங்களவையில் காரசார விவாதம்:
விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்றும் விளக்கமளித்தார். ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அவசியம் என்ன?
காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் பேசிய போது. “பாஜக இந்த மசோதாவை ஆதரிப்பது புரிந்தபோதிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதாதள நண்பர்கள் ஆதரிப்பது ஏன் என்பது தான் எனக்கு புரியவில்லை. இது ஒரு அரசியல் சட்ட விரோத மசோதா. மத்திய சட்ட அமைச்சகத்துக்கே இது தெரியும். இந்த மசோதா, மத்திய அரசுக்கு பலத்த தோல்வியையே அளிக்கும். டெல்லியில், தேர்ந்தெடுக்ப்பட்ட அரசு இருக்கும்போது, இம்மசோதாவுக்கு என்ன அவசியம்? இதை நிறைவேற்ற அரசியல்சட்டரீதியாக அதிகாரமோ, தார்மீக உரிமையோ கிடையாது” என்றார்.
ஆளுனர் மீது சாடல்:
திமுக எம்.பி., திருச்சி சிவா பேசியபோது “ஜனநாயக உணர்வையும், அரசியல்சட்டத்தையும் இந்த மசோதா மீறுவதாக அமைந்துள்ளது. எந்த மாநில அரசும் சுயமாக இயங்க மத்திய அரசு அனுமதிப்பது இல்லை. மாநில அரசுகள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது இல்லை. ஒன்று, மத்திய அரசு அத்துமீறுகிறது அல்லது மத்திய அரசு சார்பில் ஆளுநர் அத்துமீறுகிறார்” என குற்றம்சாட்டினார்.
வாக்கெடுப்பு:
விவாதத்தை தொடர்ந்து, மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 131 பேர் மசோதாவிற்கு ஆதரவாகவும், 102 பேர் மசோதாவிற்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை ஆதரவுடன் டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, விரைவில் இந்த மசோதா சட்டமாக டெல்லியில் அமல்படுத்த உள்ளது.
அதிகாரத்தை இழக்கும் கெஜ்ரிவால்:
புதிய சட்டம் அமலுக்கு வந்தால் துணை நிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் உள்ள அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்படும். அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய தேசிய தலைநகர் சிவில் சேவை ஆணையம் உருவாக்கப்படும். இதில் முதலமைச்சர், முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மத்திய அரசால் இரு செயலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைகளாக அனுப்பப்படும். அவற்றை துணை ஆளுநர் நிராகரிக்கவோ, மறுபரிசீலனைக்கு அனுப்பவோ அதிகாரம் பெற்றுள்ளார்.
தனது சொந்த விருப்பத்தின் பேரில் டெல்லி சட்டப்பேரவையை கூட்டவோ, சட்டப்பேரவை நாட்களை நீடிக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. அரசின் நிர்வாகத்தில் குறைகள் இருப்பின், அதனை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தெரிவிக்காமல் நேரிடையாக துணை நிலை ஆளுநரிடம் அதிகாரிகள் கொண்டு செல்லலாம். டெல்லி சட்டப்பேரவைக்கு அதிகாரிகள், வாரியங்கள், ஆணையங்கள், சட்டப்பூர்வ அமைப்புகளை அமைக்கும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவரான முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் இருக்காது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)