![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
வேளாண் மண்டலத்தில் எரிவாயு திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்
நிலக்கரி மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால், அதில் இருந்து விலக்கு பெற மாநில அரசு தான் மத்திய அரசிடம் பேச வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது.
![வேளாண் மண்டலத்தில் எரிவாயு திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் - வானதி சீனிவாசன் Vanathi Srinivasan said that the state government should clarify whether gas projects can be implemented in agriculture zone TNN வேளாண் மண்டலத்தில் எரிவாயு திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/2d0a01635478ccacccd19307754f5c541680592514820188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை சாய்பாபா காலனி பகுதியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். பூமி பூசை நிகழ்விற்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகராட்சியை பொறுத்த வரை குடிநீர் பிரச்சினையால் பெரிய பாதிப்பு இருந்து வருகின்றது. பல்வேறு பகுதிகளில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வழங்கப்படுகின்றது. கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். பொது மக்களுக்கு லாரிகள் வாயிலாக தண்ணீர் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெயில் காலத்தின் ஆரம்பத்திலேயே குடிநீர் பிரச்சினை வருகின்றது. லாரிகள் வாயிலாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா மார்கெட் பகுதியில் நெடுஞ்சாலையை சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடக்க தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொரொனா தொற்று குறித்து மக்களுக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கின்றது. மத்திய அரசும் வழிகாட்டுதல்களை கொடுத்து இருக்கிறது, மாநில அரசும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
தஞ்சாவூர் உட்பட காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இருக்கிறது. அப்பகுதிகளில் நிலக்கரி மற்றும் எரிவாயு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினால், அதில் இருந்து விலக்கு பெற மாநில அரசு தான் மத்திய அரசிடம் பேச வேண்டும். விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு. அதேசமயம் நாட்டில் எரிபொருள் தேவை என்பது அவசியம். எரிபொருட்களை இறக்குமதி செய்வதால் தான் நம்மால் விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. அதனால் நமது நாட்டில் உள்ள வாய்ப்புகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். இத்திட்டங்களை வேளாண் மண்டலத்தில் செயல்படுத்த முடியுமா என்பதை மாநில அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும்.
கூட்டணியை தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் இதில் எந்த குழப்பமும் இல்லை. இன்றைய தேதியில் தேசிய ஐனநாயக கூட்டணி இருப்பதை தலைவர்கள் உறுதி செய்து இருக்கின்றனர். கலாஷேத்திர விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தான் முதலில் வந்தது. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சொல்லி இருக்கின்றார். அதை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்தார். புகார் தெரிவிக்கும் மாணவிகளின் பெயர், புகைபடங்கள் வெளியிடப்படக் கூடாது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் கொடுக்க வேண்டும்.
பாலியல் ரீதியாக துன்புறுத்தலை தடுக்க விசாகா கமிட்டி அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும். நிறைய இடங்களில் விசாகா கமிட்டி அமைக்காமல் இருக்கின்றனர். விசாகா கமிட்டி அமைக்கப்படுவதை சமூக நலத்துறை உறுதிபடுத்த வேண்டும். ராகுல் காந்தி விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் பா.ஜ.கவிற்கும் தொடர்பில்லை. எல்லாரும் இருக்கும் உரிமையை போல ராகுல் காந்திக்கும் சட்ட ரீதியாக போராடும் உரிமை இருக்கின்றது. இதில் பிரதமர் மீது பாய்வதில் அர்த்தம் இல்லை” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)