உதகையில் தொடங்கியது கோடை விழா ; 2 ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!
சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகை கோடை விழா நடத்தப்படவில்லை.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உதகை கோடை விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், கோடை விழா நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி உடன் கோடை விழா துவங்கியது. நீலகிரி மாவட்ட நிர்வாகம், தோட்டக் கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை சார்பில் இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை கோடை விழா நடைபெற உள்ளது. இந்த காய்கறி கண்காட்சியில் காய்கறிகளைக் கொண்டு சுவர் கடிகாரம், மீன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 500 கிலோ கேரட் மற்றும் முள்ளங்கிகளைக் கொண்டு 12 அடி உயர ஒட்டக சிவங்கி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோல 300 கிலோ கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு 7 அடி உயரம் கொண்ட ஒட்டக சிவங்கி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் மீண்டும் மஞ்சப்பை, நீலகிரி 200 மற்றும் இயற்கை விவசாயம் ஆகியவைகளை சிறப்பிக்கும் வகையில் காய்கறிகளை கொண்டு கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கோடை விழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, கண்காட்சியை ஆர்வத்துடன் கண்டு இரசித்து வருகின்றனர்.

கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று முதல் 21ம் தேதி வரை ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தோட்டக்கலை துறை அரங்கில் வனத்துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் இயற்கை சார்ந்த புகைப்படங்கள், வன விலங்குகள் மற்றும் பராம்பரிய கட்டிடங்கலின் புகைப்படங்கள் இடம்பெற உள்ள்ன. 13 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை கூடலூரில் வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது.

கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர் கண்காட்சி வருகின்ற 20 ம் தேதி முதல் 24 ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பரதநாட்டியம், கிராமிய கலைகள், இன்னிசை கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் 18ம் தேதி முதல் 24 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 25 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. கோடை விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக படகு போட்டி ஊட்டி ஏரியில் வருகின்ற 19 ம் தேதி நடைபெற உள்ளது. கோடை விழாவினை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் உதகைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Before You Go
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்ஷனில் இறங்கிய POLICE
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















