அதிமுக பலவீனமா.? - எடப்பாடியை நேரடியாக விமர்சித்த செங்கோட்டையன்...
எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடுகளை பார்க்கும் போது, எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா உருவாக்கிய இயக்கம் வலுவிழந்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கடுமையாக விமர்சித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு நாட்களே ஆன நிலையில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவது குறித்து பதிலளித்தார். தற்போது தான் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றும், அனைத்து விஷயங்களுக்கும் உடனடியாக பதில் கூற இயலாது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை உடனே கேட்டால் சொல்ல முடியாதது போல, அரசின் செயல்பாடுகளும் படிப்படியாக முன்னேறும். முதலமைச்சர் விஜய் அறிவித்த 200 யூனிட் இலவச மின்சார திட்டத்தை மக்கள் வரவேற்றுள்ளனர். மகளிர் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
டாஸ்மாக் கடைகள் தொடர்பாக அவர் கூறுகையில், “பேருந்து நிலையங்கள் மற்றும் ஆலயங்கள் அருகே டாஸ்மாக் கடைகள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் 717 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. பொறுப்பேற்ற உடனேயே இத்தகைய சாதனைகளை செய்திருப்பது முதலமைச்சர் விஜயை தவிர வேறு யாராலும் முடியாது” என்று புகழாரம் சூட்டினார்.
அ.தி.மு.க. குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகளை பார்க்கும் போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் வலுவிழந்து வருவது போல தெரிகிறது. ‘நான் ஒருவரே போதும்’ என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார். அதை காலத்தின் கட்டாயம் மாற்றிக் காட்டும்” என்று விமர்சித்தார்.
மேலும், “அ.தி.மு.க.வுக்கு எத்தனை அமைச்சர்கள் என்ற கேள்விக்கு நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்; இதுவரை நாங்கள் எதுவும் கூறவில்லை” என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















